ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.400 க்கு விற்பனை!: கட்டுமானப்பணிகள் பாதிக்கும் அபாயம்
சென்னை: தமிழகத்தில் ஒரு மூட்டை சிமெண்ட் விலை 400 ரூபாயாக உயர்ந்துள்ளதால் கட்டுமானப்பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே சிமெண்ட் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இதனால், கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிமெண்ட் விலை மேலும் உயர்ந்துள்ளது.
இது குறித்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் சிமெண்ட் விநியோகஸ்தர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: "தென்னிந்தியாவில் உள்ள சிமெண்ட் உற்பத்தி ஆலைகள் மூலம் மாதம் ஒன்றுக்கு 130 லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இது தற்போது பாதியாக குறைந்துவிட்டது. சிமெண்ட் தேவை குறைந்ததே இதற்கு காரணம். அரசு கொள்முதல் செய்யும் சிமெண்ட் அளவும் குறைந்துவிட்டது. இதனால், சிமெண்ட் ஆலைகளில் ஒரு மாதத்துக்கு 13 நாட்கள் மட்டுமே உற்பத்தி நடக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பரில் ஒரு மூட்டை சிமெண்ட் 280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இது சிறிது சிறிதாக விலையேறி கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி 400 ரூபாயை எட்டியது.
கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ஆலைகள் தமிழக அரசுக்கு சிமெண்ட்டை குறைந்த விலைக்கு கொடுப்பதால், வெளிச் சந்தையில் எவ்வளவு விலை அதிகரித்து விற்றாலும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சிமெண்ட் நிறுவனங்கள் இஷ்டத்துக்கு விலையை ஏற்றி வருகின்றன" என்றார்.
சிமெண்ட் தேவை
தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்காக மாதம்தோறும் தேவைப்படும் சிமெண்ட்டின் அளவு தோராயமாக 17 லட்சம் மெட்ரிக் டன். இது போதாது என்று ஆந்திராவிலிருந்து சுமார் 4 மெட்ரிக் டன் சிமெண்ட் நமது தேவையைப் பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது.
ஆந்திராவில் உற்பத்தியாகும் சிமெண்ட் மூட்டைக்கு ரூ.100 வரை விலை உயர்த்தப்பட்டது. இந்த விலை ஏற்றத்தால் சிமெண்ட் மூட்டை ரூ. 310 வரை கடந்த சில மாதங்களுக்கு முன் விலை உயர்ந்தது. விலை ஏற்றம் காரணமாக ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்குக் கொண்டுவரப்படும் சிமெண்ட்டின் அளவு 3 லட்சம் மெட்ரிக் டன்வரை குறைந்தது. இதனால் சிமெண்ட் கிடைப்பதில் சிறிது தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன்மூலம் தமிழகத்தில் இருக்கும் சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் விலையை ஏற்றியதாகக் கூறுகின்றனர்.
அம்மா சிமெண்ட்
தமிழகத்தில் அம்மா சிமெண்ட் என்ற பெயரில் மூட்டை ஒன்றுக்கு 190/- ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒருபக்கம் தமிழக அரசு குறைவாக விற்றாலும் வெளிமார்க்கெட்டில் சிமெண்ட் விலை மூட்டைக்கு, 100 ரூபாய் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாககட்டுமானத் துறையினர் குமுறுகின்றனர்.