சென்னையில் பறக்கும் ரயிலை தகர்க்க மீண்டும் சதி.. சைலேந்திர பாபுவுக்கு "சவால்" விடும் சமூகவிரோதிகள்!
Recommended Video
சென்னை: சென்னையில் தண்டவாளத்தில் கல் வைத்து பறக்கும் ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டது. எனினும் அது முறியடிக்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு வேளச்சேரியிலிருந்து கடற்கரை நோக்கி ரயில் ஒன்று புறப்பட தயாரானது. அப்போது வேளச்சேரி- பெருங்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது ரயிலின் அடிபாகத்திலிருந்து பெரும் சப்தம் எழுந்தது.
இதையடுத்து ரயிலின் டிரைவர் பாதி வழியில் நிறுத்திவிட்டு பார்த்தார். அப்போது தண்டவாளத்தில் சிமென்ட் கற்கள் சிதறி கிடந்தன. இதையடுத்து வேளச்சேரி ரயில் நிலைய அதிகாரி சம்பவ இடத்தில் சென்று பார்த்த போது தண்டவாளத்தில் சிமென்ட் சிலாப்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து திருவான்மியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்துக்கு நேற்று தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி சைலேந்திர பாபு வந்திருந்தார்.
அவர் வேளச்சேரி நோக்கி சென்ற பறக்கும் ரயிலில் ஏறி ஒவ்வொரு ரயில் நிலையமாக சென்று ஆய்வு செய்தார். அதுபோல் வேளச்சேரியில் சிமென்ட் சிலாப் வைக்கப்பட்ட இடத்துக்கு சென்றும் ஆய்வு மேற்கொண்ட அவர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் பெருங்குடி- தரமணி இடையே இயக்கப்பட்டு வரும் பறக்கும் ரயில் தண்டவாளத்தில் ரயிலை தகர்க்க சிமென்ட் சிலாப் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள், ரயில் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏடிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு செய்த நிலையில் இரண்டாவது முறையாக ரயிலை தகர்க்க நடத்தப்பட்ட முயற்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.