கீழடிக்கு வந்த மத்திய அமைச்சர்களுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு... விரட்டியடித்தனர் - வீடியோ
கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடத்தை பார்வையிட வந்த மத்திய அமைச்சர்களை மக்கள் தேசம் அமைப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாராய்ச்சி நடக்கும் இடத்தில் ஆய்வு செய்ய வந்த மத்திய அமைச்சர்கள் மகேஷ் சர்மா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழர்களின் 2500 ஆண்டுகள் பழமைவாய்ந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, அங்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி நடந்து வந்தது. அதில் தமிழர்களின் பெருமைமிகு வரலாறு, நாகரீக வளர்ச்சி, பண்பாடு ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளமுடிந்தது.
இந்த ஆராய்ச்சி தொடர்ந்தால், தமிழர்கள் உலகின் தொன்மையான, பண்பட்ட கலாச்சாரத்தைக் கொண்டிருந்தனர் என்பதை நிரூபிக்க முடியும். ஆனால் மத்திய அரசு ஆராய்ச்சியைத் தொடர்வதற்கான நிதியை ஒதுக்க மறுத்தது. அதோடு மட்டுமில்லாமல் அமர்நாத் ராமகிருஷ்ணனையும் இடம் மாற்றியது. இதனால் கீழடி மக்களும் சமூக ஆர்வலர்களும் கொதிப்படைந்தனர்.
இந்நிலையில்,கீழடியில் அகழ்வாராய்ச்சி நடக்கும் இடத்தில் ஆய்வு செய்ய வந்த மத்திய அமைச்சர்கள் மகேஷ் சர்மா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு மக்கள் தேசம் அமைப்பினரும் பொதுமக்களும் கடுமெதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.