தெலுங்கு மெர்சலுக்கு தணிக்கை சான்று வழங்க தாமதிக்கவில்லை.. சென்சார் போர்டு விளக்கம்!
தெலுங்கு மெர்சலுக்கு தணிக்கை சான்று வழங்க தாமதிக்கவில்லை என சென்சார் போர்டு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை: தெலுங்கு மெர்சலுக்கு தணிக்கை சான்று வழங்க தாமதிக்கவில்லை என சென்சார் போர்டு விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசின் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து மெர்சல் திரைப்படத்தில் விமர்சிக்கப்பட்டது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அரசுக்கு எதிரான காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதற்கு மற்ற அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
தெலுங்கில் டப்பான மெர்சல்
ராகுல் காந்தியும் மெர்சல் படத்துக்கு ஆதரவாக டிவிட்டியதால் மெர்சல் படம் தேசிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் மெர்சல் படத்தை தெலுங்கு மொழியில் டப் செய்து ஆந்திராவில் வெளியிடப்படும் என கூறப்பட்டது.
நேற்று வெளியாக வேண்டியது
இதற்காக ஆந்திராவில் உள்ள தணிக்கை குழுவுக்கு படம் அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று ஆந்திரா முழுவதும் படம் வெளியாகும் என கூறப்பட்டது.
தாமதிக்கும் சென்சார் போர்டு
ஆனால் அறிவித்தப்படி ஆந்திராவில் மெர்சல் படம் இதுவரை வெளியாகவில்லை. தணிக்கை குழு சான்றிதழ் அளிக்காததால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
நியாயமாக சான்று
இந்நிலையில் இது குறித்து மத்திய தணிக்கை வாரிய தலைவர் பிரசூன் ஜோஷி விளக்கமளித்தார். அதாவது, தமிழ் பதிப்புக்கு வழங்கியதுபோல் தெலுங்கு மெர்சலுக்கும் நியாயமாக தணிக்கைச் சான்று வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அழுத்தம் கொடுக்க வேண்டாம்
மெர்சலுக்கு தணிக்கை சான்று வழங்குவதில் தாமதப்படுத்துவதாக கூறுவது ஆச்சிரியமளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்கூட்டியே தணிக்கைச் சான்று தரக்கோரி தயாரிப்பாளர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேதியை முடிவு செய்யும் போதே
விஜயின் தெலுங்கு மெர்சலுக்கு தணிக்கை சான்று தர வழக்கமான நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது என்றும் பிரசூன் ஜோஷி தெரிவித்துள்ளார். திரைப்படம் வெளியிடும் தேதியை முடிவு செய்யும் போது தணிக்கைக்கான காலத்தை கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் தணிக்கை வாரிய தலைவர் பிரசூன் ஜோஷி தெரிவித்துள்ளார்.