ஸ்கூலுக்கு போகாமல் குழந்தைகள் இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது!
தமிழகத்தில் பள்ளிக்கு செல்லாமல் உள்ள 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது
சென்னை: தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள், பள்ளிக்கு செல்லாத குழந்தை என 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி என்ற மத்திய அரசின் கீழ் இயங்கும் இயக்கத்தின் சார்பாக சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அதில் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி ஐந்து முதல், 14 வயது வரையுள்ள குழந்தைகள் கட்டாயம் பள்ளியில் சேர வேண்டும் என்றும், அதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த திட்டத்தை சிறப்பாக செய்யவும், மேலும் கல்வி பெற முடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு உதவவும் கணக்கெடுக்கும் பணி ஒன்றை நடத்த அந்த சுற்றறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த, 14 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளை, பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றும், அதையும் மீறி சேர்க்கப்படாத குழந்தைகள், பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், படிப்பை பாதியில் முடித்தவர்கள், குழந்தை தொழிலாளர்கள் உள்ளிட்டோரை பற்றிய விபரங்களை கணக்கெடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், அனைவருக்கும் கல்வி இயக்கத்தினரும், ஆசிரியர்களும் இந்த கணக்கெடுப்பில் ஈடுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் மாவட்டமாக கருதப்படும் நாமக்கல்லில் இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது.
நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் குறித்த இந்த கணக்கெடுப்பு இரண்டு நாட்களுக்கு தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற மாவட்டங்களிலும் இப்பணி தொடங்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.