கீழடி அகழாய்வுப் பணிக்குழு தலைவராக அமர்நாத் நீடிக்கலாம்.. மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அதிரடி!
கீழடி அகழாய்வுப் பணிக்குழுவின் தலைவராக அமர்நாத் நீடிக்கலாம் என்று மத்திய நிர்வாக தீர்ப்பாயம் பரிந்துரை செய்துள்ளது.
மதுரை: கீழடி அகழாய்வுப் பணிக்குழுவின் தலைவராக இருந்த அமர்நாத்தின் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய மத்திய நிர்வாக தீர்ப்பாயம் பரிந்துரைத்துள்ளது.
மதுரை அருகே கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது அங்கு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 5300 பண்டைய பொருட்களும் அங்கே கண்டறியப்பட்டன. மேலும், அகழாய்வு குழியின் இடை அடுக்கில் எடுக்கப்பட்ட பொருட்களில் நடத்தப்பட்ட கரிம பகுப்பாய்வு சோதனையில் கீழடி நகர நாகரீகம் கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது உறுதிபடுத்தப்பட்டது.
பணி நிறுத்தம்
இந்நிலையில், மத்திய அரசு இந்த ஆராய்ச்சியை பாதியிலேயே நிறுத்தியது. இதனை எதிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்த்தனர்.
ஆய்வின் அடுத்த கட்டம்
இதனிடையே, மதுரை அருகே கீழடியில் புதைந்திருந்த தமிழர் நாகரீகத்தை வெளிக் கொண்டு வந்த புகழ்மிக்க பணியின் கண்காணிப்பாளராக பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணன் 3ம் கட்ட ஆய்விற்கான நிதி கேட்டு மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்தார்.
அசாமிற்கு தூக்கியடிப்பு
இந்நிலையில், கீழடி தொல்லியல் ஆய்வுகளுக்கு தலைமையேற்று நடத்திய அமர்நாத் ராமகிருஷ்ணன் தமிழகத்தில் இருந்து அசாம் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தனது புதிய கொள்கை முடிவுகளைக் காரணம் காட்டி இந்த பணியிட மாற்றத்தை மத்திய அரசு நிகழ்த்தியது.
தொய்வு
அதிகாரியின் அதிரடி மாற்றத்தால் கீழடி அகழ்வாய்வு பணிகளில் தொய்வு நிலை ஏற்பட்டது. இதற்கு தமிழ் ஆர்வலர்களும், வரலாற்று பிரியர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
முறையீடு
இந்நிலையில், அமர்நாத் தனது பணியிடம் மாற்றம் குறித்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்திடம் முறையிட்டார். புகாரில் அகழாய்வு பணி பாதிக்கப்படாமல் இருக்க பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அமர்நாத் கோரினார்.
பரிந்துரை
இந்தப் புகாரை ஏற்றுக் கொண்ட தீர்ப்பாயம், மத்திய அரசுக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பியுள்ளது. மேலும், அமர்நாத்தின் பணியிட மாற்றத்தை ரத்து செய்யுமாறும் தீர்ப்பாயம் பரிந்துரை செய்துள்ளது.