நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் மத்திய ஆயுஷ் குழுவினர் திடீர் ஆய்வு
நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் மத்திய ஆயுஷ் குழுவினர் நேற்று மாலை திடீர் ஆய்வு செய்தனர்.
நெல்லை : நெல்லை சித்த மருத்துவக் கல்லூரியில் மத்திய ஆயுஷ் குழுவினர் திடீர் ஆய்வு நடத்தி உள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் மாணவர் சேர்க்கை, கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிகிச்சை முறை ஆகியவற்றை இந்த குழுவினர் ஆய்வு செய்து சான்று அளிப்பது நடைமுறையாகும்.
நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரி 50 ஆண்டுகளை கடந்த பராம்பரியம் மிக்க கல்லூரியாகும். இங்கு சித்த மருத்துவ இளங்கலை படிப்புக்கு அதிகபட்சமாக 100 மாணவர்கள் ஆண்டுதோறும் சேர்க்கப்படுகின்றனர்.
சித்த உயர் கல்வி மற்றும் செவிலியர் படிப்பும் இங்கு கற்று கொடுக்கப்படுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் மாவட்டத்தில் பரவி மக்களை துன்பத்தில் ஆழ்த்தியது.
அப்போது இந்த கல்லூரி சார்பில் தயாரித்து வழங்கப்பட்ட நில வேம்பு கசாயம் நல்ல பலனை கொடுத்தது. அப்போது முதல் தினமும் காலையில் நிலவேம்புக் கசாயம், சளி, காய்ச்சலை போக்கும் ஆடாதொடா குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை போது போதுமான வசதி உள்ளதா என்பது குறித்து மத்திய ஆயுஷ் குழுவினர் ஆய்வு நடத்தி சான்று வழங்குவது வழக்கம். இந்தாண்டும் மாணவர்களை சேர்க்க போதுமான வசதி உள்ளதா என்று மத்திய ஆயுஷ் குழுவினர் நேற்று மாலை திடீரென ஆய்வு நடத்தினர்.
அவர்களை கல்லூரி பொறுப்பு முதல்வர் டாக்டர் விக்டோரியா வரவேற்றார். மத்திய குழுவினர் கல்லூரியில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் சென்று ஆய்வு நடத்தினர். ஒவ்வொரு பிரிவிலும் உள் நோயாளிகள் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கபடும் சிகிச்சை, நர்சுகள், உதவியாளர்கள், புற நோயாளிகள் பிரிவு, ஆய்வு கூடம், மாணவ, மாணவிகள் தங்கும் விடுதி ஆகியவற்றை பார்வையிட்டு சென்றுள்ளனர்.