சென்னை: ‘செருப்பு’க்காக மோதிக்கொண்ட சுயேட்சைகள்... குலுக்கல் முறையில் ஒதுக்கீடு
சென்னை: லோக்சபா தேர்தலில் காலணி சின்னத்தைப் பெறுவதற்காக மத்திய சென்னையில் இரு சுயேட்சை வேட்பாளர்களிடையே போட்டி உண்டானதால் குலுக்கல் முறையில் அச்சின்னம் ஒதுக்கீடு செய்யப் பட்டது.
மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் அவர்களுக்கான சின்னங்கள் குறித்த பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, காலணி சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக் கோரி சுயேட்சை வேட்பாளர்களான மு.முருகன் மற்றும் ஜெய்கணேஷ் ஆகிய இருவரும் விருப்பம் தெரிவித்திருந்தனர்.
ஆனால், ஒரே சின்னத்தை இருவருக்கும் ஒதுக்க இயலாது என தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. ஆனால், இருவருமே அச்சின்னத்தை விட்டுத் தர மறுத்ததால் குலுக்கல் முறையில் சின்னத்தை ஒதுக்கீடு செய்வது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நடந்த குலுக்கலில், மு.முருகன் பெயர் தேர்வானதையடுத்து, அவருக்கு காலணி சின்னம் ஒதுக்கப்பட்டது.