தொடர்ந்து கலகலக்கும் மதிமுக... மத்திய சென்னை மா.செ. அம்பிகாபதி கட்சியில் இருந்து விலகல்
சென்னை: மதிமுக மத்திய சென்னை மாவட்ட செயலாளராக இருந்த ரெட்சன் அம்பிகாபதி அக்கட்சியில் இருந்து விலகுவதாக பொதுச்செயலர் வைகோவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியை வைகோ உருவாக்கியதற்கு மதிமுகவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மதிமுக மூத்த தலைவர்கள் பலரும் கட்சியை விட்டு விலகி திமுகவில் இணைந்தனர்.
சென்னையைப் பொறுத்தவரையில் தென்சென்னை வேளச்சேரி மணிமாறன், மத்திய சென்னை ரெட்சன் அம்பிகாபதி போன்றோர் மதிமுகவுக்கு தூண்களாக இருந்தவர்கள். இதில் வேளச்சேரி மணிமாறன் தேர்தலுக்கு முன்பே வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒதுங்கிவிட்டார். பின்னர் திமுகவில் இணைந்தார்.
தற்போது மத்திய சென்னை மதிமுக மாவட்ட செயலாளரான ரெட்சன் அம்பிகாபதியும் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துவிட்டார். அம்பிகாபதி கடந்த சில நாட்களாக கட்சி நடவடிக்கையில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
தற்போது தாம் கட்சியில் இருந்து வெளியேறுவதாக வைகோவுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் மதிமுக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் அம்பிகாபதி என்பது குறிப்பிடத்தக்கது.