வர்தா புயல் சேதத்தை பார்வையிட மத்திய குழு டிச.27-ம் தேதி தமிழகம் வருகை
வர்தா புயலால் ஏற்பட்ட சேதத்தை பார்வையிட மத்திய குழு டிச.27-ம் தேதி தமிழகம் வருகிறது.
சென்னை: தமிழகத்தில் 'வார்தா' புயலால் ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பாக பார்வையிட மத்திய குழு டிசம்பர் 27-ம் தேதி சென்னை வருகிறது என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருவாய் நிர்வாக ஆணையர் சத்ய கோபால் ஆகியோர் தெரிவித்தனர்.
வர்தா புயல் பாதிப்பு குறித்து சென்னை எழிலகத்தில் உள்ள அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார், இந்த ஆய்வின் போது வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், வருவாய்த்துறை செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன்பின்னர் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள மத்திய உள்துறையின் இணைசெயலாளர் பிரவீன் வசிஸ்ட்டா தலைமையிலான 8 பேர் அடங்கிய நிபுணர் குழு செவ்வாய்க்கிழமை அன்று தமிழகம் வருகிறது.
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவார்கள், மேலும் இந்த குழுவினர் எங்கெங்கு செல்வார்கள் என்பது குறித்து குழுவில் இடம் பெறுவோர் விபரம் குறித்து திங்கட்கிழமை தெரிய வரும்.
சென்னைக்கு வரும் மத்திய குழுவினருக்கு முதலில் தலைமை செயலகத்தில் வீடியோ காட்சிகள் மூலம் பாதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் சேதமடைந்த பொருட்கள், குறித்து விளக்கம் அளிக்கப்படும், இதன் பின்னர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று குழுவினர் பார்வையிடுவார்கள்.
புயலின்போது அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், புயல் தாக்குதலுக்குப் பிறகு எடுக்கப்பட்ட நிவாரணப் பணிகள், புயல் தாக்கியதால் ஏற்பட்ட இழப்புகள் ஆகியன குறித்து மத்திய குழுவினருக்கு அதிகாரிகள் விரிவாக எடுத்துரைப்பார்கள் என்றார்.