”அம்மி, ஆட்டுக்கல், நாய் கொடுப்போம்" வாக்குறுதிதான் மிச்சம்-ப.சிதம்பரம் கிண்டல்
நாகர்கோவில்: அம்மி , ஆட்டுக்கல், கிளி , நாய்தான் இலவசமாய் கொடுக்க இனி மிச்சம் என்று அமைச்சர் சிதம்பரம் இலவச அறிவிப்புகளைப் பற்றி கிண்டலாக கூறியுள்ளார்.
"தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்துக்கும் குறைந்துள்ளது. இதன் பாதிப்பை வரும் தலைமுறையினர் சந்திக்க வேண்டும்'' என நிதி அமைச்சர் சிதம்பரம் பேசினார். கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் தேரிவிளையில் காங்கிரஸ் சார்பில் காமாராஜர் சிலை திறப்பு விழா நடந்தது.
சிலையை திறந்து வைத்து சிதம்பரம் பேசிய போது,"மாணவர்கள் எப்படி தேர்வை எதிர்கொள்கிறார்களோ ,அது போலத்தான் மக்கள் தேர்தலை எதிர்கொள்கின்றனர். பல மாநிலங்களிலும் இன்று முதலீடு குறைந்து இலவசங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் பொருளாதார வளர்ச்சி சரிந்து வருகிறது. முதலீடு மானியம் இலவசம் போன்றவற்றை உள்ளடக்கியது தான் பொருளாதார வளர்ச்சி.
மானியங்கள் கொடுப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் இன்று மானியமும் முதலீடும் காணாமல் போய் "விலை இல்லா" காலம் வந்துள்ளது. இனி தமிழகத்தில் இலவசமாக அம்மி , ஆட்டுக்கல் , கிளி, பூஜை பொருள், நாய் என்று தான் வழங்க வேண்டும். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்துக்கும் குறைந்துள்ளது. தொழிலில் முதலீடு இல்லாத மாநிலத்தில் இளம் தலைமுறையினர் பாதிக்கப்படுவர். முதலீடா, இலவசமா என்பதை இந்த தேர்தலில் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்"என்று கூறினார்.