ராமேஸ்வரத்தில் அப்துல் கலாமுக்கு பிரம்மாண்ட நினைவு மண்டபம்... மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு
ராமேஸ்வரம்: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சமாதியில் நினைவு மண்டபம் அமைப்பது குறித்து, மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்துல் கலாம் உடல், ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பு என்ற இடத்தில், நல்லடக்கம் செய்யப்பட்டது. ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்துள்ள கலாம் சமாதிக்கு, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவரது சேவைகளை, இளைய தலைமுறையினர் அறிந்திடும் வகையில் பிரம்மாண்டமான நினைவு மண்டபம், அருங்காட்சியகம், நுாலகம், தியான மண்டபம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், சமாதி அமைந்துள்ள, 1.84 ஏக்கர் நிலத்தை சுற்றி, சுவர் அமைக்க, மாநில பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நேற்று, கலாமிற்கு நினைவு மண்டபம் அமைப்பதற்கு, மதுரையில் உள்ள மத்திய பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் கணேசன் உத்தரவுப்படி, இளநிலை பொறியாளர் மற்றும் உதவியாளர்கள், 'டோட்டல் ஸ்டேஷன் டிஜிட்டல் சர்வே' என்ற கருவி மூலம் கலாம் சமாதி அமைந்துள்ள மொத்த இடத்தையும், அளவை செய்தனர்.
இதுதொடர்பான அறிக்கை, ஓரிரு தினங்களில் மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளனர். அதன் பின், கட்டடக் கலை நிபுணர்கள் மூலம் நினைவு மண்டபத்தின் வரைபடம் தயாரிக்கப்பட உள்ளது. சமாதி அமைந்துள்ள இடம், தேசிய சாலை மட்டத்தை விட, 8 அடி பள்ளத்தில் உள்ளதால், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதை தடுக்க, இப்பகுதியில் சவுடு மணல் கொட்டி பள்ளத்தை மேடாக்கி, பின்னர் பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான நினைவு மண்டபம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.