தமிழக வெள்ளம்: 'கடுமையான இயற்கை பாதிப்புகள்' என மத்திய அரசு அறிவிப்பு - ஜெயலலிதா தகவல்
சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை கடுமையான இயற்கை பாதிப்புகள் ‘Calamity of Severe Nature' என மத்திய அரசு அறிவித்துள்ளது என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்கள், அதிலும் குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின.
தமிழக அரசு சார்பில் வெள்ளப் பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. அதில், தமிழக வெள்ளச் சேதங்களை பார்வையிட மத்தியக் குழுவினை அனுப்பி வைக்கவும் உடனடியாக நிதி உதவி அளிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மத்திய குழு வெள்ளச் சேதங்களை பார்வையிட்டு சென்ற பின், டிசம்பர் முதலாம் தேதி முதல் பெய்த கன மழையின் காரணமாக வட கடலோர மாவட்டங்கள் மீண்டும் பாதிப்புக்குள்ளாயின. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி வெள்ளப் பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு, பின்னர் தமிழக வெள்ளச் சேதங்கள் குறித்து முதல்வருடன் விவாதித்தார்.
தமிழகத்திற்கு ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடர் என அறிவிக்கும்படி பிரதமரிடம் முதல்வர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்ற மத்திய அரசு, தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை கடுமையான பாதிப்புகள் - ‘Calamity of Severe Nature' என அறிவித்துள்ளது என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.