பஸ் கட்டண உயர்வுக்கு மத்திய அரசை குறை சொல்வதா? அமைச்சர் ஜெயக்குமாருக்கு தமிழிசை கண்டனம்
பேருந்து கட்டண உயர்வுக்கு எந்த விதத்திலும் மத்திய அரசு காரணம் அல்ல என்று தமிழிசை தெரிவித்து உள்ளார்.
கன்னியாகுமரி : பேருந்து கட்டண உயர்வுக்கு மத்திய அரசு எந்த விதத்திலும் காரணமில்லை.தேவையில்லாமல் இதில் மத்திய அரசு மீது குறை சொல்ல வேண்டாம் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.
தமிழக அரசுப் பேருந்துகளில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை அடுத்து கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல இடங்களில் பொதுமக்கள், அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் போராடி வருகின்றன.
இந்நிலையில், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் பேருந்து கட்டண உயர்வுக்கு தமிழக அரசு எந்த விதத்திலும் காரணமில்லை என்றும், போதிய அரசு நிதியை மத்திய அரசு வழங்காததால் தான் கட்டணம் உயர்த்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், இதற்கு முழுக்க முழுக்க மத்திய அரசு தான் காரணம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இன்று குமரி மாவட்டம் வழுக்கம்பாறையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து உள்ளார்.
அவர் பேசுகையில், தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு மத்திய அரசு காரணம் இல்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், மத்திய அரசு ஒதுக்கிய நிதியை தமிழக அரசு சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்று தமிழிசை குறிப்பிட்டு உள்ளார்.