காவிரி.. நல்லா டிராமா போடுகிறது மத்திய அரசு.. மதுரையில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நாடகம் ஆடுகிறது என்று ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுரை : காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் உச்சநீதிமன்ற கெடு முடிவடையும் நேரத்தில், நீதிமன்றத்தில் தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டு மனு செய்வது எல்லாம் மத்திய அரசின் திட்டமிட்ட நாடகம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மதுரையில் நடந்த நியூட்ரினோ ஆய்வுத் திட்ட எதிர்ப்புக் கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நாடகம் ஆடுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் ஆறு வார கால அவகாசம் அளித்தும், அதுகுறித்து வாய் திறக்காத மத்திய அரசு, கெடு முடிவடையும் நேரத்தில் தீர்ப்பில் விளக்கம் கேட்டு மனுத்தாக்கல் செய்வது எல்லாம் திட்டமிட்ட நாடகம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் இரண்டு முறை தீர்ப்பளித்தும் அதை மத்திய அரசு மதிக்கவில்லை. இதன் மூலம் நாட்டின் உட்சபட்ச அதிகாரிகம் கொண்ட நீதி அமைப்பை மத்திய அரசு அவமதித்துள்ளது.
ஆனால், தமிழக ஆட்சியாளர்கள் அதனைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறார்கள். காவிரி விவகாரத்தில் அதிமுகவின் 50 எம்.பி.,க்களும் ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு அழுத்தம் தந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் தவறிவிட்டார்கள் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.