அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரிய இந்தியை கட்டாயமாக்குவது ஏன் : அன்புமணி
அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரிய இந்தியை கட்டாயமாக்குவது ஏன் என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரிய இந்தி கட்டாயம் என்பது, இந்தி மொழியை திணிக்கும் முயற்சி என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரிய இந்தி கட்டாயம் என்று மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சி என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆசிரியர்கள் அல்லாத பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அடிப்படை இந்தி அறிவைப் பெற்றிருக்க வேண்டும். இந்தி தெரியாதவர்களுக்கு வேலை வழங்கப்படமாட்டாது என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
பிற மொழிகளை அழித்து விட்டு, இந்தியை ஊக்குவிப்பதற்கான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. போபால் தவிர இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைந்துள்ள அனைத்து மாநிலங்களும் இந்தி பேசாத மாநிலங்கள் ஆகும். அங்கு பணியாற்ற இந்தி மொழி அறிவு தேவையில்லை எனும் போது இந்தி அறிவை வேலைவாய்ப்புக்கான தகுதியாக மத்திய அரசு அறிவிப்பது எந்த வகையில் நியாயம் ?
எந்த வகையிலும் பணிக்கும், மக்களுடன் தொடர்பு கொள்ளவும் தேவைப்படாத இந்தி மொழியை கட்டாயமாக்குவது பின்னணியில் தான் மிகப்பெரிய சதி உள்ளது. அடுத்தக்கட்டமாக ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். மத்தியப் பல்கலைக்கழகங்கள் என அனைத்து மத்திய அரசு நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்த தீர்மானித்துள்ளது.
இதன்மூலம் இந்தியை நாடு முழுவதும் பரப்பலாம் என்பது தான் இதன் பின்னணியிலுள்ள திட்டமாகும். எனவே, இந்தி அறிவு தேவைப்படாத எந்த பணிக்கும் அதை கட்டாயம் என்று அறிவிக்கக்கூடாது. கொல்கத்தா இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான ஆள் தேர்வு அறிவிப்பை திரும்பப்பெற்று புதிய அறிவிப்பை வெளியிடப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.