காவிரி: மத்திய அரசோடு சேர்ந்து உச்சநீதிமன்றமும் தமிழர்களின் வயிற்றில் அடிக்கிறது- ராமதாஸ்
காவிரி விவகாரத்தில் மத்திய அரசோடு சேர்ந்து உச்சநீதிமன்றமும் தமிழர்களின் வயிற்றில் அடிக்கிறது என்று ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Recommended Video
சென்னை: மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் தொடர்ந்து நீதியைத் தாமதப்படுத்துவதால் தமிழக விவசாயிகள் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொள்ளும் நிலை உருவாகி உள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான செயல்திட்டத்தின் வரைவை தயாரித்து மே 3ம் தேதி எங்களிடம் தாக்கல் செய்யுங்கள் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். இந்த இழுத்தடிப்பு நடவடிக்கைகள் மூலம் மே 12ம் தேதி நடைபெறவுள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற பாஜக முயலும்.
அதன்பின் கோடை விடுமுறை முடிந்து ஜூலை மாதத்திற்குப் பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு வரும். இடைப்பட்ட காலத்தில் குறுவை சாகுபடிக்கு தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது.
அதற்குள் அக்டோபர் மாதம் 2ம் தேதி வந்து விடும். அன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெறுகிறார். அதற்குள் வழக்கு விசாரணை முடிந்திருந்தால் அவர் தீர்ப்பளிப்பார். இல்லாவிட்டால் புதிய அமர்வு ஏற்படுத்தப்பட்டு மீண்டும் வழக்கு விசாரிக்கப்படும்.
அது இன்னும் பல ஆண்டுகளுக்கு இழுத்தடிக்கப்படும். இதனால் தமிழக விவசாயிகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வார்கள். மத்திய அரசை கண்டிப்பது போல வலிக்காமல் அடித்தும், நம்மை வயிற்றில் கொடூரமாக அடித்தும் உச்ச நீதிமன்றம் வஞ்சித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.