தூத்துக்குடியில் மக்களை சுட்டது காவல்துறையினர்தானா? திருமாவளவன் எழுப்பும் பரபரப்பு சந்தேகம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மத்திய அரசின் பங்கு உள்ளது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடலூர் : தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் காவல்துறையினரா அல்லது ஸ்டெர்லைட் உரிமையாளர் அனில் அகர்வாலின் அடியாட்களா என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த மாதம் 22ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புபோராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக நியாயமான முறையில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. இது தொடர்பாக கண்டனப் போராட்டங்களும் மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் பேசுகையில், தூத்துக்குடி சம்பவம் குறித்து முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் .
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் மீண்டும் அதனைத் தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதில் மத்திய அரசின் தலையீடு உள்ளது.
துப்பாக்கிச்சூட்டின் போது நீல மற்றும் மஞ்சள் நிற உடையில் இருந்தவர்கள் காவல்துறையினரா அல்லது ஸ்டெர்லைட் நிறுவன உரிமையாளர் அனில் அகர்வாலின் அடியாட்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.