தமிழகத்திலுள்ள 4 மருத்துவ கல்லூரிகளை தரம் உயர்த்த மத்திய அரசு பல நூறு கோடி நிதி ஒதுக்கீடு
தமிழகத்திலுள்ள 4 மருத்துவ கல்லூரிகளை தரம் உயர்த்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
டெல்லி: தமிழகத்திலுள்ள 4 மருத்துவ கல்லூரிகளின் தரத்தை உயர்த்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 1-ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மருத்துவ கல்லூரிகளின் தரம் குறித்து அதிமுக எம்.பி லட்சுமணன் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய சுகாதார துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே கூறுகையில் தமிழகத்திலுள்ள 4 மருத்துவ கல்லூரிகளை தரம் உயர்த்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அவை தஞ்சை, மதுரை, சேலம் மற்றும் நெல்லை ஆகிய மருத்துவமனைகள் ஆகும்.
தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மத்திய அரசு சார்பில் ரூ. 120 கோடியும், மதுரை மருத்துவ கல்லூரிக்கு ரூ.125 கோடியும், சேலம் மருத்துவக் கல்லூரிக்கு ரூ.100 கோடியும், நெல்லை மருத்துவக் கல்லூரிக்குரூ. 120 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசு சார்பில் முறையே ரூ. 30 கோடியும், ரூ. 25 கோடியும், ரூ. 39 கோடியும், ரூ.30 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பிரதமர் மந்திரி சுவஸ்திய சுரக்ஷா யோஜனா (பிஎம்எஸ்எஸ்ஒய்) என்ற திட்டத்தின் கீழ் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். இந்த நிதியை கொண்டு மருத்துவ கல்லூரிகளின் உள்கட்டமைப்பு, பரிசோதனை கூடம், கருவிகள், மருத்துவ சாதனங்கள், அடிப்படை வசதிகள் ஆகியன மேம்படுத்தப்படும்.
நாடு முழுவதும் கடந்த 2016-ஆம் ஆண்டு 13 மருத்துவ கல்லூரிகள் தரம் உயர்த்துவதற்காக தேர்வு செய்யப்பட்டன. அதில் மாநில வாரியாக எந்தெந்த கல்லூரிகள் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதை மத்திய பொருளாதார விவகார குழு முடிவு செய்தது. அந்த வகையில் தமிழகத்தில் 4 கல்லூரிகள் தரம் உயர்த்தப்படவுள்ளன.
இதுபோல் பீகார், குஜராத், மத்திய பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் உள்ள மருத்துவ கல்லூிகளை தரம் உயர்த்துவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.