எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை சட்ட தளர்வை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்: ஸ்டாலின்
எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை சட்ட தளர்வை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video
சென்னை : எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புசட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியை கண்டித்து திமுக தொடர்ந்து போராடும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த வழக்கில் கடந்த மார்ச் 20ம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அதில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தது.
இதனைக் கண்டித்து வடமாநிலங்களில் தலித் அமைப்புகள் நடத்திய கலவரத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து தமிழகத்திலும் இதனைக் கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், வன்கொடுமை தடுப்பு சட்ட தளர்வு தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதனையடுத்து இன்று வடமாநிலங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு, தலித் மக்கள் படுகொலை உள்ளிட்ட அரசு வன்கொடுமைகளைக் கண்டிக்கும் வகையிலும், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்துக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தியும், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை அரசியல் அமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் இணைக்க வற்புறுத்தியும் திமுக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டம் தளர்வு செய்யப்பட்டிருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது அந்த சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சி என்று குறிப்பிட்டார்.
மேலும், தாழ்த்தப்பட்டோர் சமுதாயத்துக்கு தனி அமைச்சகம் உருவாக்கியது திமுக அரசு தான். மேலும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டத்தி நிறைவேற்றியவர் கருணாநிதி. எனவே, இந்த சட்டதளர்வை எதிர்க்கும் அனைத்து உரிமையும் திமுகவுக்கு உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.
உடனடியாக எஸ்.சி.,எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உச்சநீதிமன்றம் ஏற்படுத்தியுள்ள வரைமுறைகள் குறித்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் திமுக தொடர்ந்து போராடும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.