இப்போது சட்டசபைக்கு தேர்தல் வர வேண்டாம்...தமிழிசைக்கு பொன்னார் பதிலடி!
தமிழகத்திற்கு இப்போதைக்கு பொதுத் தேர்தல் வரவேண்டாம் என்று பாஜக விரும்புவதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழகத்திற்கு விரைவில் சட்டசபைத் தேர்தல் வரும் என்று பாஜகவின்
நாகர்கோவில்: இப்போதுள்ள சூழலில் தமிழகத்திற்குப் பொதுதேர்தல் வரக்கூடாது என்று பாஜக கருதுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். முன்னதாக தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் மிக விரைவில் வரும் என்று பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்திருந்தார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்து விரைவில் சட்டசபை தேர்தல் வரும் என கூறி வருகிறார். ஆனால் இதற்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறிவருகிறார்.
இது குறித்து நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழ் தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கியவர்கள் திராவிட கழகங்கள் தான். தமிழக அரசு இதுவரை தமிழ் வளர்ச்சிக்கு என்னென்ன செய்துள்ளது என்பது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
திராவிட கழகங்கள்..
50 ஆண்டு தமிழகத்தில் கழகங்கள் எந்த அளவுக்கு தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டு உள்ளன என்பது தெரியவேண்டும். தமிழ் எந்தளவுக்கு வளர்ந்துள்ளது என்பது பற்றி கழகங்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.
பாஜக தமிழுக்கு எதிரி இல்லை
பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவந்துள்ள கல்வி திட்டத்தில் அவரவர் தாய் மொழியை படிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கழகங்கள் செய்த துரோகத்திற்கு மாற்றாக பிரதமர் மோடியின் கல்வி திட்டம் பயன் உள்ளதாக அமையும். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கல்வி தரம் மிகவும் குறைந்துவிட்டது.1967-ல் தி.மு.க. ஆட்சிக்கு வர பயன்படுத்திய இந்தி எதிர்ப்பை மீண்டும் பயன்படுத்த முயற்சிக்கிறது.
தேர்தல் வேண்டாம்
தமிழகத்தில் தற்போது பொது தேர்தல் வரக்கூடாது என்று பாரதிய ஜனதா கருதுகிறது. கடந்தகால ஆட்சி முறைகளில் மாற்றம் செய்தாலே போதுமானது. மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசு 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம்.
அழித்த திமுக, அதிமுக
50 ஆண்டுகளாக தமிழகத்தை கழகங்கள் அழித்துவிட்டன. தற்போது நேர்மையான, தூய்மையான ஆட்சி வரும்காலம் நெருங்கிவிட்டது. தமிழகத்தில் பாரதியஜனதா ஆட்சி அமைவது பற்றி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் மகிழ்ச்சியுடன் பார்த்து கை தட்டும் சூழல் கண்டிப்பாக உருவாகும்.
திமுகவுக்கு அருகதை இல்லை
தமிழக அரசு நீர்நிலைகளை பாதுகாக்க தவறிவிட்டது என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். அதற்கு அவருக்கு எந்த தகுதியும் கிடையாது. விவசாயிகளை ஏமாற்றி தி.மு.க. அரசியல் ஆதாயம் தேடி வருகிறது. இதேபோல அ.தி.மு.க. ஆட்சியை பினாமி ஆட்சி என்று கூறவும் தி.மு.க.வுக்கு அருகதை இல்லை. தி.மு.க. தங்களது அரசியலை முடித்துக்கொள்ள வேண்டும்.
பூரண மதுவிலக்கு
மதுவுக்கு எதிராக போராடுபவர்கள் மீது வழக்கு போடுவது, தாக்குதல் நடத்துவது போன்றவற்றை கோர்ட்டு கண்டித்து உள்ளது. தமிழக மக்கள் தங்கள் உரிமைக்காக போராட்டம் நடத்துகிறார்கள். அதை தடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் கிடையாது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
கண்டுகொள்ளாத தமிழக அரசு
சென்னை - கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலை திட்டத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி தர மத்திய அரசு தயாராக உள்ளது. அதே போல மதுரவாயல் திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த திட்டத்தை மேலும் 10 கிலோ மீட்டர் தூரம் நீட்டிக்கவும் மத்திய அரசு உதவும், ஆனால் மாநில அரசு அதை கண்டு கொள்ளவில்லை.'
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஒரே கட்சியில் உள்ளவர்கள் இப்படி மாற்றி மாற்றி பேசுவது அக்கட்சிக்குள் இருக்கும் குழப்பத்தை வெளிப்படுத்துகிறது என்றும் இவர்கள் எப்படி மக்களின் குழப்பத்தைத் தீர்த்து வைப்பார்கள் என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.