சோடா பாட்டில் வீசுவதை நல்ல அர்த்தத்தில்தான் ஜீயர் கூறியிருப்பார்.. பொன்னார் 'வக்காலத்து'
ஜீயர்களுக்கு சோடா பாட்டில் எல்லாம் வீசத்தெரியாது என்றும், அவர் அப்படி சொல்லி இருக்க மாட்டார் என்றும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
Recommended Video
சென்னை: ஜீயர் சோடா பாட்டில் வீசுவதாக நல்ல அர்த்தத்தில் கூறியிருப்பார் என்றும் அதைத் தவறாக நினைக்க வேண்டாம் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்
தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் பாடலாசிரியர் வைரமுத்து எழுதிய கட்டுரையை, ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிலும் அவர் வாசித்தபோது, ஆண்டாளை தேவதாசி என்று தெரிவித்ததாக கூறி இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வைரமுத்து தனது கருத்துக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம் உண்ணாவிரதம் இருந்தார். பின், பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் வைரமுத்து வந்து மன்னிப்புக் கேட்காவிட்டால் மீண்டும் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகக் கூறினார்.
இந்நிலையில், நேற்று வைரமுத்துவுக்குக் கண்டனம் தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம், "எங்களுக்கு கல்லெறியவும் தெரியும், சோடா பாட்டில் வீசவும் தெரியும்" என்று கூறினார். வன்முறையைத் தூண்டும் விதமாக ஜீயரின் பேச்சு இருந்ததாக கூறி அவருக்கு பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், "ஜீயர் சோடா பாட்டில் வீசுவதாக நல்ல அர்த்தத்தில் கூறியிருப்பார். அதைத் தவறாக நினைக்க வேண்டாம். ஆன்மீகப் பெரியார்கள் அப்படியெல்லாம் பேசமாட்டார்கள், அவர்களுக்கு பாட்டிலெல்லாம் வீசத்தெரியாது என்று கூறியுள்ளார்.
பாட்டில் வீசுவதில் என்ன நல்ல அர்த்தம் இருக்கிறது என்று செய்தியாளர்கள் யாரும் பொன்.ராதாகிருஷ்ணனிடம் எதிர்க்கேள்வி எதுவும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.