For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1965 இந்தி திணிப்பு போருக்குப் பின் தமிழகத்தில் களமிறக்கப்படும் துணை ராணுவப் படை

தமிழகத்தில் துணை ராணுவப் படையை திணிப்பதே உரிமைப் போராட்டங்களை நசுக்குவதற்காகவே.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    கடையடைப்பு| துணை ராணுவப்படை தமிழகம் வருகை | பதப்படுத்தப்பட்ட உடல்கள்- வீடியோ

    சென்னை: அரை நூற்றாண்டுக்குப் பின் தமிழகம் துணை ராணுவப் படையை எதிர்கொள்ள இருக்கிறது. 1965 ஆம் ஆண்டு இந்தி திணிப்புக்கு எதிரான மாபெரும் மக்கள் புரட்சி நிகழ்ந்த போது அதை ஒடுக்க துணை ராணுவப்படை வந்தது. இப்போது அத்தகைய கிளர்ச்சி இல்லாத நிலையில் தமிழகம் ஒருவித அரசியல் அசாதாரண பதற்றத்துக்குள் தள்ளப்பட்டு துணை ராணுவப் படை என்பது வர இருக்கிறது.

    2 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது தமிழகம் நிம்மதியைத் தொலைத்து... அரசியல் கலாசார வாழ்வுரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுக்க இயலாது; ஆயிரமாயிரம் ஆண்டுகாலமாக அனுபவித்த காவிரி நதிநீர் உரிமை கிடையாது;

    விளைநிலங்கள் அனைத்தையும் இயற்கை வளத்தை சுரண்டி எடுக்கும் பணம் காய்ச்சி மரங்களாக பார்க்கும் அரசின் சட்டங்கள்.. மண்ணையும் மக்களையும் பாதுகாக்கும் மலைகள் எல்லாம் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களின் வேட்டைக்காடு.. இதற்காக வாழ்வாதரமாக இருக்கும் விளைநிலங்களை அரசாங்கத்தின் பெயரில் கொள்ளையடிப்பது இப்படித்தான் தமிழகம் அசாதாரண சூழலில் நித்தம் நித்தம் இருந்து வருகிறது.

    ஜல்லிக்கட்டு புரட்சி

    ஜல்லிக்கட்டு புரட்சி

    இதன் விளைவுதான் உலகத்தை உலுக்கிய ஜல்லிக்கட்டுப் புரட்சியும் கதிராமங்கலமும் நெடுவாசலும் தூத்துக்குடியும் எழுந்தன, . அமைதிப் புரட்சியின் மூலம் உலக நாடுகளை அசைத்த அரபு வசந்தங்களைப் போல சாதித்துக் காட்டியது ஜல்லிக்கட்டு கிளர்ச்சி. இதுதான் டெல்லி நம்மை கண்டு மிரண்ட தருணம்.. அதனால்தான் உள்ளூர் போலீசை வைத்து ஒடுக்கிப் பார்த்தது.

    அறவழியால் தன்னெழுச்சி

    அறவழியால் தன்னெழுச்சி

    ஆனாலும் ஓயவில்லையே தமிழர் தம் உரிமைப் போர்.. நெடுவாசல் முளைத்தது.. கதிராமங்கலம் சீறியது.. உள்ளூர் போலீசால் இந்த கிளர்ச்சிகளை தடுக்க முடியவில்லை. ஏனெனில் தமிழர்கள் கையிலெடுத்தது அமைதிவழி அறவழி கிளர்ச்சி. பல்லாயிரம் ஆண்டுகால வாழ்வியலைக் கொண்ட தமிழர்களின் அரசியல் பண்பாட்டை சொன்னது இந்த அறவழி கிளர்ச்சி. இதுவே மக்களை தன்னெழுச்சி கொள்ள வைக்கிறது.

    பல்லாயிரம் பேர் ஆதரவு

    பல்லாயிரம் பேர் ஆதரவு

    இதுதான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான கிளர்ச்சியிலும் நீடித்தது. 100 நாட்களாக துளி அசம்பாவிதமும் இல்லாமல் ஒற்றை மரத்தடிதான் போர்க்களம்... ஆம் அன்று அலங்காநல்லூர் வாடிவாசல் போர்க்களமாக இருந்ததைப் போல குமாரெட்டியாபுரத்து அந்த மரத்தடிதான் போர்க்களம்.. காலை முதல் மாலை ஆயிரமாயிரம் பேர் ஏதோ திருத்தலத்துக்கு வருவது போல கிளர்ச்சிக்கு வந்து ஆதரவு தெரிவித்து சென்றனர்.

    பச்சை படுகொலை

    பச்சை படுகொலை

    இந்த அமைதிப் பேரெழுச்சிதான் தூத்துக்குடியில் தன்னெழுச்சிப் புரட்சியாக வெடித்தது. தமிழர்கள் அமைதிவழியில் போராடியே சாதிக்கிறார்கள் என்ற அரச பயங்கரவாதத்தின் உச்சகட்ட ஆத்திரம்; ஆற்றாமையின் வெளிப்பாடுதான் இப்போது தமிழர்களை நரவேட்டையாடுவது என்கிற முடிவோடு களமிறங்கியுள்ளது உள்ளூர் போலீஸ். இதன்விளைவுதான் நேற்றைய படுகொலைகள்.

    துணை ராணுவத்தை அனுப்பும் டெல்லி

    துணை ராணுவத்தை அனுப்பும் டெல்லி

    தூத்துக்குடி மக்களை வன்முறைப் பாதையை நோக்கி திசைதிருப்பிக் கொண்டே இருக்கிறது.. இதற்காகவே சமூக விரோதிகளை களமிறக்கிப் பார்க்கிறது.. போலீசே சமூகவிரோதிகளாக மாறியும் பார்க்கின்றனர். ஆனாலும் மக்கள் ஓய்வதாக இல்லை.இதையடுத்தே இப்போது உடனே துணை ராணுவப் படையை அனுப்புகிறதாம் மத்திய அரசு. இதற்கு தமிழக அரசும் ஒப்புக் கொண்டிருக்கிறது.

    ஒடுக்குமுறைக்காக துணை ராணுவம்

    ஒடுக்குமுறைக்காக துணை ராணுவம்

    இதற்காகத்தான் துணை ராணுவப் படையை டெல்டா மாவட்டங்களில் நடமாட விட்டு சில வாரங்களுக்கு முன் ஒத்திகை பார்த்தது. இப்போது பகிரங்கமாகவே அதிகாரப்பூர்வமாக தமிழ்நாட்டு மண்ணில் துணை ராணுவப் படையை அனுப்புகிறது டெல்லி.

    English summary
    The Centre will deploy the paramilitary forces in Tuticorin.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X