விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து ஓபிஎஸ் பிரதமரை நேரில் சந்திக்காதது ஏன்? விஜயகாந்த் காட்டம்
விவசாயிகள் பிரச்சனைக்கு தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை: விவசாயிகளுடைய பிரச்சனைக்கு தீர்வு காண, தமிழக முதல்வரோ அல்லது வேளாண்மைத்துறை அமைச்சரோ பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, அங்குள்ள விவசாயிகளுடைய குறைகளை கேட்டறிந்து, பாரத பிரதமரை நேரில் சென்று சந்தித்து விவசாயிகளுனுடைய பிரச்சனையை முழுமையாக தீர்வு காண ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
பருவமழை பொய்த்துவிட்டதால் போதிய தண்ணீர் இல்லாமல் விவசாய விளைநிலங்களில் பயிரிடப்பட்ட நெல், வாழை மற்றும் மானாவரி பயிர்கள் கருகிவிட்டது அதனை கண்ட விவசாயிகள் மன வேதனை அடைந்து மாரடைப்பால், நாகை மாவட்டம் 34 பேர், திருவாரூர் 12 பேர், தஞ்சாவூர் 4 பேர், தூத்துக்குடி 2 பேர் மற்றும் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருச்சி, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களில் 60 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர் என்கிற செய்தி அதிர்ச்சியையும், மன வேதனையையும் அளிக்கிறது.
விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான், நாம் சோற்றில் கை வைக்கமுடியும் எங்கிற பழமொழிக்கு ஏற்ப அவர்களுடைய வாழ்க்கையும், வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. ஆளுகின்ற அரசு பயிற்காப்பீட்டு திட்டத்தின் கீழ் நிதியுதவியை, சென்ற அக்டோபர் மாதமே வழங்கி இருக்க வேண்டும். நான்கு மாதங்கள் ஆகியும் இன்று வரை வழங்கப்படவில்லை என விவசாயிகள் அரசை குறைகூறுகிறார்கள்.
மேலும் விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் கடன் பெற சென்றால், உதாரணமாக 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களுக்கு ஒரு ஏக்கர் நிலத்திற்கு மட்டும்தான் கடன் வழங்கப்படுகிறது. மீதம் நான்கு ஏக்கருக்கு கந்துவட்டிக்காரர்களிடம் அதிக வட்டிக்கு பணம் வாங்கி விவசாயம் செய்தும், போதிய தண்ணீர் இல்லாமல் விளைநிலங்கள் பொய்த்துவிட்டது. இதனால் பெற்ற கடனை திரும்ப செலுத்தமுடியாமல் தற்கொலைக்கு ஆளாகிறார்கள்.
தற்கொலை செய்துகொள்ளும் என்னத்தை கைவிட்டு விவசாயிகள் எதையும் தைரியமாக எதிர்த்து போராட வேண்டும். தங்களுக்கு பின்னால் குடும்பம் இருக்கிறது என்பதை மனதில் கொண்டு, இனிமேல் விவசாயிகள் யாரும் தற்கொலை முயற்ச்சிக்கு ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
ஆளுகின்ற அரசு ஜெயலலிதா இறந்த பிறகு சட்டதிட்டத்திற்கு உட்பட்டு முதலமைச்சர் பதவியை உடனே ஏற்பதும், தங்களுக்கு தேவையென்றால் பாரத பிரதமரை நேரில் சென்று சந்திப்பது போல, ஏன் இந்த விவசாயிகளுடைய பிரச்சனைக்கு தீர்வு காண, தமிழக முதலமைச்சரோ, அல்லது வேளாண்மைத்துறை அமைச்சரோ பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, அங்குள்ள விவசாயிகளுடைய குறைகளை கேட்டறிந்து, பாரத பிரதமரை நேரில் சென்று சந்தித்து விவசாயிகளுனுடைய பிரச்சனையை முழுமையாக தீர்வு காண ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
இனிமேலாவது நமது விவசாயிகள் தற்கொலை முயற்ச்சிக்கு ஆளாகாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, உயிரிழந்த குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.