சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இனி போலீஸ் பாதுகாப்புடன் “கார் பார்க்கிங்” – ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: சென்னையில் ஒப்பந்தப்பணி இறுதி முடிவு செய்யும் வரையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் கார் நிறுத்தும் இடத்துக்கு கட்டணத்தை போலீஸ் பாதுகாப்புடன் தெற்கு ரயில்வே நிர்வாகமே வசூலிக்க வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஹைகோர்ட்டில் வழக்கறிஞர் கே.சுதன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கார் நிறுத்தும் இடத்தை சட்டவிரோதமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு வாகனங்களை நிறுத்தும் பொதுமக்களிடம் இருந்து அதிக கட்டணத்தை சில சமூக விரோதிகள் வசூலிக்கின்றனர்.
இதை தட்டிக் கேட்டால் அவர்கள் பொதுமக்களை மிரட்டுகின்றனர். கார் நிறுத்தும் இடத்தில் வாடகை கார்கள், ஆட்டோக்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், சென்ட்ரல் ரயில் நிலையம் செல்லும் பொதுமக்கள் தங்களது காரை நிறுத்த இடம் இல்லாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதனால், வாகனத்தை நிறுத்துபவர்கள் சட்டவிரோத கும்பலுக்கு பெரும் தொகையை கொடுக்க வேண்டியுள்ளது.
எனவே, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வாகன நிறுத்தும் இடத்தை ஒழுங்குபடுத்தவும், வாடகை கார்கள், ஆட்டோக்கள் ஆகியவைகள் ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் நிறுத்த வேண்டும் என்றும் சட்டவிரோதமாக வாகன நிறுத்தும் இடத்தை ஆக்கிரமித்து அதிக கட்டணத்தை வசூலிக்கும் கும்பல் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம், தமிழக டி.ஜி.பி, ரயில்வே பாதுகாப்பு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் அப்துல் முபீன் ஆஜராகி வாதிட்டார்.
இவ்வழக்கு விசாரணையை அடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "சென்ட்ரல் ரயில் நிலையம் முன்புள்ள இடத்தில் பெரும் பகுதி மெட்ரோ ரயில் பணிக்காக பல மாதங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கார் நிறுத்தம் இடத்தின் வரைபடம் எங்கள் முன்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "ஏ" என்று வரையறை செய்யப்பட்டுள்ள இடத்தில் 61 கார்கள் நிறுத்த முடியும். இந்த கார் நிறுத்தம் கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்தப்பணி வழங்கப்பட்டு விட்டது.
மேலும், பிரிமீயம் கார் நிறுத்தம் இடத்தில் 48 கார்கள் நிறுத்த முடியும். இந்த கார் நிறுத்த கட்டணம் வசூலிக்கும் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த டெண்டர் வருகிற 22 ஆம் தேதி இறுதி செய்யப்படும் என்றும், ஒரு மாதத்துக்குள் இந்த ஒப்பந்த பணி நடவடிக்கை அனைத்தும் முடிவுக்கு வந்து விடும் என்றும் ரயில்வே நிர்வாகம் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த ஒப்பந்தம் இறுதி செய்யும் வரை பிரிமீயம் கார் நிறுத்தம் பகுதியை தெற்கு ரயில்வே நிர்வாகமே கண்காணித்து கட்டணத்தை வசூலிக்கவேண்டும்.
இதற்காக அந்த ரயில்வே ஊழியர்களுக்கு, தமிழக போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு போலீசார் தகுந்த பாதுகாப்பினை வழங்க வேண்டும். இந்த வழக்கை பைசல் செய்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.