அள்ளிக்கொடுக்குமா...? கிள்ளிக்கொடுக்குமா...? - இன்று வருகிறது மத்திய ஆய்வுக்குழு
ஓகி புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட 8பேர் கொண்ட மத்திய ஆய்வுக்குழுவினர் இன்று தமிழகம் வருகின்றனர்.
Recommended Video
சென்னை: ஓகி புயல் கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய ஆய்வுக்குழுவினர் சேத மதிப்பு குறித்து ஆராய இன்று தமிழகம் வருகின்றனர்.
ஓகி புயல் குறித்து அரசு போதிய முன்னெச்சரிக்கை மற்றும் நடவடிக்கைகளை வழங்காத நிலையில் அதில் சிக்கி பலரின் வாழ்க்கை சின்னாபின்னமாகி விட்டது. குறிப்பாக மீனவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக மாறியது நவம்பர் 30. கடலுக்கு சென்ற ஏராளமான மீனவர்கள் சீற்றத்தில் சிக்கி உருவமற்ற நிலையில் கடலில் பிணமாக மிதந்தனர். இன்னும் சிலர் படுகாயங்களுடன் தங்களின் உடமைகளை இழந்த நிலையில் கரை சேர்ந்தனர்.
கன்னியாகுமரி மற்றும் கேரளாவையே புரட்டிப்போட்ட ஓகி புயல் கடலில் மட்டும் தன் கோரத்தாண்டவத்தை ஆடவில்லை, நிலப்பகுதியிலும் ஆடித்தான் தீர்த்தது. இதனால் ஏராளமான ரப்பர் மரங்கள் சாய்ந்து ரப்பர் தொழிலே தற்போது அங்கு கேள்விக்குறியாகியுள்ளது.
கடலுக்கு சென்று மாயமாய் போன மீனவர்களின் கதி என்ன என்று தெரியாத நிலையில், ஓகி புயல் சேதங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள 8பேர் கொண்ட மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் சேதங்களை பார்வையிடும் இக்குழு வரும் 29ம் தேதி மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்துகிறது.
இதனைத்தொடர்ந்து டெல்லி செல்லும் இக்குழுவினர் மத்திய அரசிடம் சேத விவரங்கள் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர். பொதுவாக டெல்லியிலிருந்து தமிழகம் வரும் மத்திய ஆய்வுக்குழுவினர் சேதங்களின் விபரங்களை முழுமையாக உள்வாங்காமல், இரண்டு மூன்று இடங்களை மட்டும் பார்த்து விட்டு குறைந்தளவிலான இழப்பீடை வழங்கவே பரிந்துரை செய்வது வழக்கம்.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் கட்சி பாகுபாடின்றி பல எம்.பிகளும் இணைந்து ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இதனைத்தொடர்ந்தே ஆய்வுக்குழு நியமிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் இம்முறை முறையான இழப்பீட்டை இந்த ஆய்வுக்குழுவினர் நிர்ணயம் செய்து மத்திய அரசுக்கு பரிந்துரைப்பார்கள் என்றும் கருதப்படுகிறது.