குமரியில் ஓகி புயல் பாதிப்பு இடங்களுக்கு போகாமல் போட்டோக்களை மட்டும் பார்வையிட்ட ஆய்வு குழு!
கன்னியாகுமரியில் ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்யாமல் வெறும் புகைப்படங்களை மத்திய குழு ஆய்வு செய்வது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்யாமல் வெறும் புகைப்படங்களை மத்திய ஆய்வுக் குழு ஆய்வு செய்து வரும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. முதல் நாளே அதிக அளவு மழை பெய்தது. பின் வங்கக் கடலில் ஓகி என்ற புயல் உருவானது.
இந்த புயல் தென் தமிழகத்தையும் கேரளாவின் ஒரு சில பகுதிகளையும் புரட்டி போட்டது. இந்த புயல் உருவானது தெரியாமல் மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற மீனவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் இதுவரை கரை சேரவில்லை. அவர்களின் கதி என்ன என்று தெரியாமல் உறவினர்கள் தவிக்கின்றனர்.
மத்திய அரசு ரூ.133 கோடி
ஓகி புயல் பாதிப்புகளுக்கு நிவாரணப் பணிகளுக்காக ரூ. 876 கோடி நிதி தேவைப்படுவதாக மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம் எழுதியது. ஆனால் முதல் கட்டமாக ரூ. 133 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.
மத்திய குழு ஆய்வு
ஓகி புயலால் 400 மீனவர்கள் காணவில்லை என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்நிலையில் மத்திய உள்துறை இணைச் செயலாளர் சஞ்சீவகுமார் ஜிந்தால் தலைமையிலான 4 போ் கொண்ட குழுவினா் சென்னை, திருவள்ளூா் உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்கின்றனா்.
4 பேர் ஆய்வு
இதே போன்று மற்றொரு 4 போ் கொண்ட குழுவானது ஓகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கன்னியாகுமாி மாவட்டத்தில் ஆய்வு செய்கின்றது. கன்னியாகுமரியில் புகைப்பட கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள புயல் பாதிப்பு பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். அவர்களிடம் 220 மீனவர்களை காணவில்லை என்று தமிழக குழுவினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். ஓகி புயல் பாதிப்பு குறித்த இடங்களுக்கு நேரில் செல்லாமல் புகைப்படங்களை பார்வையிடுவதன் மூலம் பாதிப்புகளை நீர்த்து போக செய்யும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
உண்மை நிலவரம் எப்போது?
ஓகி புயல் பாதிப்பு, மீனவர்களின் எண்ணிக்கை குறித்து உண்மை நிலவரத்தை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. இந்த நிலையில் நிதி ஒதுக்கீட்டை குறைத்து ஒதுக்குவதற்காக இதுபோல் புயல் பாதிப்புகளை மத்திய அரசும், தமிழக அரசும் மூடி மறைக்க பார்ப்பதாகவே கருதப்படுகிறது.