நெல்லையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைப் பணிகள் நிறைவு - மத்திய அரசு குழு ஆய்வு
நெல்லை : நெல்லையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்ததால் மத்திய குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாளகத்தில் மத்திய அரசின் நிதி உதவியுடன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுமானப் பணிகள் கடந்தாண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இதுவரை தற்போது 80 சதவீத பணிகள் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.
19 ஆயிரத்து 500 சதுர அடியில் ரூ. 79, 63,74,000 பணிகள் நடந்து வருகிறது. இதில் 7 அடுக்கு, 5 அடுக்கு, 3 அடுக்கு, 2 அடுக்கு என ஒன்றுடன் ஒன்று இணைந்த நிலையில் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதில் 7 அதிநவீன அறுவை கூடங்கள், 8 லிப்ட் மற்றும் கருத்தரங்கு நடத்தும் அறைகள், தனித்தனி ஆய்வுக் கூடங்கள், பரிசோதனைக் கூடங்கள் உள்நோயாளிக்கான சிகிச்சை அறைகள் போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த கட்டிடத்தை மத்திய அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட தனிக்குழுவினர் 5 நாட்கள் முகாமிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர். இதன் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளனர். இதுகுறித்து திட்ட மேலாளர் மதுபாலன் கூறுகையில், இந்த சூப்பர் ஸ்பெஷலிட்டி மருத்துவமனை தென் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு நல்ல பலன் அளிக்கும். உயர் சிகிச்சைகளுக்கும் இலவசமாக கிடைக்கும் என்று தெரிவித்தார்.