சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மீண்டும் பார்வையிட வந்துள்ள மத்திய குழு தமிழக அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளது.வரலாறு காணாத கனமழையால் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய குழு நேரில் பார்வையிட்டுவிட்டு சென்றது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் பார்வையிட வந்துள்ளது மத்திய குழு.வெள்ள பாதிப்பு பற்றி முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். இதையடுத்து வெள்ள பாதிப்புகள், சீரமைப்பு பணிகளை பார்வையிட டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையில் மத்திய குழு திங்கட்கிழமை இரவு சென்னை வந்தது.அந்த குழுவினர் இன்று பிற்பகல் முதல் வெள்ள பாதிப்புகளை பார்வையிட உள்ளனர். வெள்ளத்தால் மைலாப்பூர் சிவகாமி சாலையில் ஏற்பட்ட விரிசலை முதலில் பார்வையிடும் அவர்கள் பிறகு கோட்டூர்புரம் செல்கிறார்கள். பின்னர் சைதாப்பேட்டை ஆத்துமா நகருக்கு சென்று பார்வையிடுகிறார்கள்.சைதாப்பேட்டையை அடுத்து ஜாபர்கான்பேட்டை, விரும்பாக்கம், வேம்புலிஅம்மன் கோவில் தெரு, வளசரவாக்கம் ஆகிய இடங்களுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இன்றும், நாளையும் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு அந்த குழு டெல்லி சென்று மத்திய அரசிடம் அறிக்கையை சமர்பிக்கும்.அந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு நிவாரணம், சீரமைப்புக்காக மாநில அரசுக்கு நிதி அளிக்கும். வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்துள்ள குழுவினர் இன்று காலை தமிழக அரசு உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.