திருச்சி, திருப்பூர், நெல்லை, தூத்துக்குடிக்கும் வருது ஸ்மார்ட் சிட்டி.. பட்டியல் வெளியீடு
மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் 30 நகரங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தின் திருச்சி, திருப்பூர், நெல்லை, தூத்துக்குடி நகரங்களும் இடம் பெற்றுள்ளன.
டெல்லி: மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு இன்று வெளியிட்ட ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தமிழகத்தின் திருச்சி, திருப்பூர், நெல்லை, தூத்துக்குடி நகரங்களும் இடம் பெற்றுள்ளன. இந்தியா முழுக்க 30 நகரங்களை மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டிகளாக மாற்ற திட்டமிட்டுள்ளது.
மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டுள்ள பட்டியலில், திருச்சி, திருப்பூர், நெல்லை, தூத்துக்குடி, திருவனந்தபுரம், ராய்ப்பூர், பாட்னா, டேராடூன், அலகாபாத், ராஜ்கோட், அமராவதி, கரீமா நகர், முஸாபர்பூர், புதுச்சேரி, காந்திநகர், ஸ்ரீநகர், சாகர், கர்னல், சட்னா, பெங்களூரு, சிம்லா, பிம்ப்ரி சிஞ்சிவாட், பிளாஸ்ப்பூர், பஷிகாத், ஜம்மு, டகாத், ஜான்சி, ஐஸல், அலிகார், கங்தோக் ஆகிய நகரங்கள் உள்ளன.
இது மத்திய அரசு வெளியிட்டுள்ள இரண்டாம் கட்ட ஸ்மார்ட் சிட்டி பட்டியல் ஆகும்.
நோக்கம்
கடந்த 2015ல் பிரதமர் மோடி ஸ்மார்ட் சிட்டி பற்றி கூறுகையில், " ஒரு மனிதன் வாழ எதிர்பார்க்கும் வசதிகளையும் தாண்டி எல்லா வசதிகளையும் ஏற்படுத்துவதுதான் ஸ்மார்ட் சிட்டியின் நோக்கம் " என்று தெரிவித்திருந்தார்.
நவீன வசதிகள்
அதனடிப்படையில் இந்தத் திட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நகரங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதே ஸ்மார் சிட்டி. அனைவருக்கும் வீடு, பொருளாதார வளர்ச்சி, சுத்தமான காற்று, போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளும் இதில் அடங்கும்.
அடிப்படை வசதி
ஸ்மார்ட் சிட்டிகளில் குடிநீர், மின்சார விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, சுகாதார வசதி, போக்குவரத்து வசதி, வீட்டு வசதி, குறிப்பாக ஏழைகளுக்கு வீட்டுவசதி, அனைத்து வளாகங்களிலும் தகவல் தொடர்பு வசதிகள் அமைக்கப்படும்.
சிறந்த உள்கட்டமைப்புகள்
தண்ணீர் குழாய்கள், கழிவு நீர் சுத்திகரிப்பு, சிக்கன நீர் மேலாண்மை, குறைந்த எரிபொருள் பயன்பாடு, தரமான சாலை வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள், மாசு இல்லாத நகரியங்கள், குப்பைகள் இல்லாத வீதிகள் போன்ற உள்கட்டமைப்புகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.