100 விவசாயிகள் மரணம்... வறட்சி நிவாரணம் பெறுவதில் செயலற்றதாக தமிழக அரசு! சாதித்து காட்டிய கர்நாடகா!!
கர்நாடகாவுக்கு மத்திய அரசு வறட்சி நிவாரண நிதி அளித்துள்ளது. ஆனால் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவு கொடுத்துள்ள தமிழகமோ செயலற்றதாக இருக்கிறது.
சென்னை: மத்திய அரசிடம் போராடி குறிப்பிட்ட அளவாவது வறட்சி நிவாரண நிதியை வாங்கி சாதித்துவிட்டது கர்நாடகா அரசு. ஆனால் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவு கொடுத்த நிலையில் தமிழக அரசோ செயலற்ற நிலையில் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்துவிடாமல் வஞ்சித்து வருகிறது கர்நாடகா. உச்சநீதிமன்றம் மாத கணக்கில் ஒவ்வொரு முறையும் உத்தரவிட்டும் அதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் காவிரி நீரை திறந்துவிட மறுத்து வருகிறது கர்நாடகா.
அத்துடன் பருவமழையும் பொய்த்துப் போய்விட்டது. இதனால் தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி தாக்கியுள்ளது. காவிரி டெல்டாவில் தொடங்கிய விவசாயிகள் மரணம் அனைத்து மாவட்டங்களையும் உலுக்கி எடுத்து வருகிறது.
விவசாயிகள் பலி
இதுவரை 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாண்டுபோயுள்ளனர். தமிழக அரசு இப்போதுதான் வறட்சி நிலைமை குறித்து ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறது.
வறட்சி நிவாரண நிதி
ஆனால் கர்நாடக அரசோ, மத்திய அரசிடம் வறட்சி நிவாரண நிதியாக ரூ4,702 கோரி தற்போது ரூ1782.44 கோடியை வாங்கிவிட்டது. பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா வலியுறுத்தியும் இருந்தார். அத்துடன் வறட்சியால் 35 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரூ17,000 முதல் ரூ18,000 வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறி வருகிறார் சித்தராமையா.
மவுனியாக தமிழக அரசு
தமிழக அரசோ செயலற்றதாக வேடிக்கை பார்த்துக் கொண்டு மவுனியாக இருக்கிறது. இன்னமும் விவசாயிகள் மரணம் தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. தமிழக அரசியல் கட்சிகள் மாண்டுபோன விவசாயிகள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி தர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இப்பதான் ஆய்வாம்...
ஆனால் வறட்சி நிலைமை குறித்து ஆய்வு நடத்துகிறோம் என்ற நிலையில்தான் தமிழக அரசு இருக்கிறது. போர்க்கால அடிப்படையில் விவசாயிகளின் உயிரிழப்புகளைத் தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய அரசு ஆமை வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.