தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனங்கள் மூடல்- பாஜக அரசால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவில்!
தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்படுவதால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் அடுத்தடுத்து மத்திய அரசு நிறுவனங்களை ஈவிரக்கமில்லாமல் பாஜக அரசு மூடி வருவதால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
நாடு விடுதலை அடைந்த காலங்களில் மத்திய அரசின் பல நிறுவனங்கள் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நிறுவப்பட்டன. அதன்பின்னரும் மத்திய அரசு நிறுவனங்களை அமைக்க தமிழகம் போராடி வந்துள்ளது.
கோவை அச்சகம்
இப்படி 50 ஆண்டுகாலத்துக்கும் மேலாக தமிழகத்தில் இயங்கி வரும் பல நிறுவனங்களை திடீர் திடீரென மத்திய அரசு மூடுவது அதிகரித்துள்ளது. கோவையில் இயங்கி வந்த மத்திய அரசின் அச்சகம் அண்மையில் மூடப்பட்டது.
திருச்சி, சென்னை நிறுவனங்கள் மூடல்
அதேபோல் கோவை கரும்பு ஆராய்ச்சி நிலையம், திருச்சி வாழை ஆராய்ச்சி நிலையம், சென்னையில் உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றையும் மூட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் சென்னையை அடுத்த ஆவடியில் 56 ஆண்டுகாலம் இயங்கி வந்த ராணுவ சீருடை தயாரிப்பு ஆலையையும் மூட இருக்கிறது மத்திய அரசு.
வெளிமாநிலத்தவர் ஆதிக்கம்
அத்துடன் தமிழர்களின் நிலத்தில் தமிழர்களின் உழைப்பால் உருவான என்.எல்.சி நிறுவனம் தமது லாபத்தை தொழிலாளர்களின் நலனுக்கோ தமிழகத்துக்கோ செலவிடாமல் வட இந்தியாவில் புதிய யூனிட்டுகளை திறந்து வருகிறது. என்.எல்.சியில் வட இந்திய அதிகாரிகள், தொழிலாளர்களே அதிகரித்தும் வருகின்றனர். ஆனால் அங்கு கால் நூற்றாண்டுக்கும் மேலாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் நிலங்களை கொடுத்தவர்களுக்கும் இன்னும் விடிவு காலம் பிறக்கவில்லை.
மத்திய அரசு வஞ்சகம்
மத்திய அரசின் இத்தகைய வஞ்சகத்தால் ஆயிரக்கணக்கான தமிழர் குடும்பங்கள் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்துக்கு விரோதமான அத்தனை திட்டங்களையும் மத்திய அரசு திணித்துக் கொண்டு இருக்கிறது.
அதே நேரத்தில் தமிழர்களின் வாழ்வாதாரமான திட்டங்கள், நிறுவனங்களை பறித்துக் கொண்டிருப்பது மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிற ஒன்றாகவே இருக்கிறது. பாஜக மீது கடும் அதிருப்தியில் இருக்கும் தமிழகத்தை இப்போது மத்திய அரசு நடவடிக்கைகள் கொந்தளிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.