திண்டுக்கல் மாவட்டத்தில் 26 கிராமங்களில் 40 இடங்களில் மீத்தேன் எடுக்க திட்டம்?
திண்டுக்கல் மாவட்டத்திலும் 40 இடங்களில் மீத்தேன் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
Recommended Video
திண்டுக்கல்: காவிரி டெல்டா மாவட்டங்களைப் போல திண்டுக்கல் மாவட்டத்தில் 26 கிராமங்களில் 40 இடங்களில் மீத்தேன் எடுப்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசு இறங்கியிருக்கிறதா? என்று பொதுமக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
திண்டுக்கல் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையத்தில் சில நாட்களுக்கு முன்னர் எந்த அறிவிப்புமே இல்லாமல் திடீரென குஜராத் நிறுவனம் ஒன்று ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டது. இதை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
மத்திய அரசின் நீர்வள ஆய்வு மையத்துக்காகவே இந்த ஆழ்துளை கிணறு அமைக்கப்படுகிறது; மத்திய அரசின் டெண்டர் பெற்று இந்த ஆழ்துளை கிணறு அமைக்கிறோம் என குஜராத் நிறுவன ஊழியர்கள் தெரிவித்திருக்கின்றனர். உள்ளூர் அரசு நிர்வாகத்துக்கு எதுவும் தெரிவிக்காமல் இத்தகைய ஆழ்துளை கிணறு அமைக்கும் முயற்சி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே திண்டுக்கல் சித்தரேவு மலை அடிவாரத்தில் இதே போல் மத்திய அரசு ஒரு ஆழ்துளை கிணறை அமைத்து பூட்டு போட்டு பூட்டி வைத்திருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 26 கிராமங்களில் 40 இடங்களில் இத்தகைய ஆழ்துளை கிணறுகள் அமைக்கபட இருக்கின்றனவாம்.
நிலத்தடி நீர் வளம் குறித்த ஆய்வுக்கு ஏன் திருட்டுத்தனமாக ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கேள்வி. பொதுமக்களுக்கு பகிரங்கமாக அறிவிப்பதில் ஏன் தயக்கம்? என்பதும் பொதுமக்களின் கேள்வி.