சசி முதல்வர் பதவியேற்க முட்டுக்கட்டை போடுகிறது ராஜ்பவன்? கவலையில் கார்டன்!
சசிகலா முதல்வர் பதவியேற்க மத்திய அரசு விரும்பவில்லையாம்; முதல்வர் பதவியேற்பதற்கான தேதி குறித்து தகவல் அனுப்பியும் ராஜ்பவனில் இருந்து எந்த பதிலும் இதுவரை வரவில்லை என்பதால் கார்டன் கவலையில் இருக்கிறதாம்
சென்னை: சசிகலா முதல்வர் பதவியை ஏற்கும் தேதி குறித்து தகவல் அனுப்பியும் ராஜ்பவனில் இருந்து எந்த தகவலும் கிடைக்காதது போயஸ் கார்டனை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம்.
அதிமுக பொதுச்செயலராகிவிட்ட சசிகலா முதல்வர் பதவியையும் கைப்பற்றுவதில் முனைப்புடன் இருக்கிறார். வரும் 10-ந் தேதி அல்லது 12-ந் தேதி முதல்வர் பதவி ஏற்பதில் மும்முரமாக இருக்கிறது கார்டன்.
அமைச்சரவை பட்டியல்
இதற்காகவே 6 நாட்களில் 50 மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை என்கிற 'கின்னஸ் சாதனை' முயற்சியில் இறங்கியுள்ளார் சசிகலா. அத்துடன் சசிகலா தலைமையிலான அமைச்சரவை பட்டியலையும் தயாரித்துக் கொண்டிருக்கின்றன மன்னார்குடி உறவுகள்.
ராஜ்பவனுக்கு கடிதம்
இந்த நிலையில் சசிகலா முதல்வர் பதவி ஏற்பதற்கான தேதி தொடர்பாக ராஜ்பவனுக்கு போயஸ் கார்டனில் இருந்து தகவல் அனுப்பி வைக்கப்பட்டதாம். ஆனால் இது குறித்து எந்த ஒரு பதிலையும் ராஜ்பவன் இதுவரை அனுப்பவில்லையாம்.
மத்திய அரசு விரும்பவில்லை
ஜெயலலிதா மறைந்தபோதே அதிமுகவும் ஆட்சியும் சசிகலா கைகளுக்கு போகக் கூடாது என்பதில் கண்கொத்தி பாம்பாக இருந்தது மத்திய அரசு. இப்போது கட்சியை கைப்பற்றிய சசிகலா ஆட்சியையும் கைப்பற்றுவதை விரும்பாத நிலையில் இருக்கிறது மத்திய அரசு.
கவலையில் கார்டன்
இதனால்தான் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் ராஜ்பவன், இதுவரை போயஸ் கார்டனுக்கு எந்த ஒரு பதிலையும் தராமல் இருக்கிறதாம். இது போயஸ் கார்டனை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளதாம்.