ஓகி புயல் இடைக்கால நிவாரணம்: தமிழகத்திற்கு ரூ. 133 கோடி மட்டுமே!
ஓகி புயல் இடைக்கால நிவாரண நிதியாக ரூ. 133 கோடியை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
சென்னை: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு இடைக்கால நிவாரண நிதியாக ரூ. 133 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ரூ. 280 கோடி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்த நிலையில் இன்று ரூ. 133 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில், ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு இடைக்கால நிவாரண நிதியாக ரூ. 133 கோடி ஒதுக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் நாளை மத்திய குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்த பின்னர் கூடுதல் நிவாரணம் ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
நவம்பர் 30 தொடங்கி டிசம்பர் 2ஆம் தேதி வரை ஓகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டிப் போட்டது. பல மீனவர்கள் காணாமல் போயினர். பலர் வீடுளை இழந்தனர். விவசாயம் முற்றிலும் முடங்கிப் போனது. மீனவர்கள் 400க்கும் மேற்பட்டவர்கள் இன்னமும் கரை திரும்பவில்லை.
தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கூறப்படும் நிலையில் இடைக்கால நிவாரணமாக வெறும் 133 கோடி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது குமரி மாவட்ட மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.