மத்திய அரசின் 'ஆபரஷேன் அப்பல்லோ'... அதிர்ந்த சசிகலா... தலைவர்கள் படையெடுப்பின் பரபர பின்னணி
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தொடக்கத்தில் அமைதி காத்தது மோடி தலைமையிலான மத்திய அரசு. ஆனால் எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்ளிட்ட 27 பேர் டீமை அனுப்பி இப்போது ஜெயலலிதா உடல்நிலை விவகாரத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது மத்திய அரசு.
ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தொடக்கத்தில் அப்பல்லோ மருத்துவமனை சம்பிராதய அறிக்கைகளையே வெளியிட்டு வந்தது. ஒருகட்டத்தில் டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்திருப்பதாகவும் அந்த அறிக்கை கூறியது.
எய்ம்ஸ் மருத்துவர்கள்
தனியார் மருத்துவமனைக்கு வந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர் என்ற செய்தியே அந்த அறிக்கை மூலமாகத்தான் அனைவரும் அறிய முடிந்தது. எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சையைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து சற்று கூடுதல் விவரங்கள் வெளியாகின.
நெருக்கடி
இதனைத் தொடர்ந்தே தமிழகத்துக்கு பொறுப்பு முதல்வர் நியமிக்கப்பட வேண்டும் என ஆளுநர் வித்யாசகர் ராவ் மூலம் அழுத்தம் கொடுத்தது மத்திய அரசு. பின்னர் ஓ. பன்னீர்செல்வத்திடம்தான் முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள துறைகள் ஒப்படைக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து சாதித்தது மத்திய அரசு.
27 பேர் டீம்
இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்களில் விசாரித்த போது, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உண்மையான தகவல்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவர்கள், உளவுத்துறை அதிகாரிகள் உட்பட 27 பேர் கொண்ட டீம் அப்பல்லோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆபரஷேன் அப்பல்லோ
கிட்டத்தட்ட ஆபரேஷன் அப்பல்லோ போலத்தான் இந்த விவகாரத்தில் மத்திய அரசு இயங்கியது. தற்போது இந்த டீம் ஆளுநர் வித்யாசகர் ராவுக்கு தகவல்களை தொடர்ந்து அனுப்பி கொண்டிருக்கிறது. மற்ற மாநிலங்களில் கட்சிகளை சிதைத்து அதிரடி காட்டியபோல் தமிழகத்தில் அவ்வளவு சீக்கிரமாக இறங்கவும் பாஜக விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.
அதிர்ந்த சசிகலா
மத்திய அரசின் இந்த நெருக்கடிகளை சமாளிக்க்க முடியாமல்தான் அரசியல் கட்சித் தலைவர்களை அப்பல்லோவுக்கு வரவழைத்திருக்கிறது சசிகலா நடராஜன் டீம். திருமாவளவன் உள்ளிட்ட சிலரை வரவழைத்து பேட்டி கொடுக்க வைத்தனர். இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் அடுத்தடுத்து அப்பல்லோவுக்கு படையெடுக்க மத்திய அரசு அனைத்தையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறது 'தற்காலிகமாக'!!