எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே?... மாநில அரசில் கையில் முடிவு- மத்திய அரசு கோர்ட்டில் பதில்!
தமிழகத்தில் எங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்பதை மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவித்துள்ளது.
மதுரை : தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமையும் என்பதை மாநில அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு பதில் மனுவில் கூறியுள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக் கோரி பாஸ்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். 15க்கும் மேற்பட்ட தென்மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்றும், மதுரையில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளதாகவும் அவர் மனுவில் கூறியிருந்தார்.
இதனையடுத்து இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால் மத்திய அரசு சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தில் எங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது என்பதை மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. இது வரை தமிழகத்தில் 5 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது என்றும் பதிலில் கூறப்பட்டுள்ளது.
200 ஏக்கர் நிலம், போதுமான போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ள இடத்திலேயே எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 5 இடங்களில் ஆய்வு நடந்துள்ளதாக கூறியுள்ள மத்திய அரசு எந்தெந்த இடங்கள் அவை என்பதை குறிப்பிடவில்லை.
தொடர்ச்சியாக எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சரும், முதல்வரும் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமையும் என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும் என்று சட்டசபையில் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு கையில் தான் முடிவெடுக்கும் அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.