தூத்துக்குடியில் சிக்கிய அமெரிக்க கப்பல் விவகாரம் - அறிக்கை கேட்கிறது மத்திய அரசு
இதைத் தொடர்ந்து கப்பலில் உள்ளவர்களிடம் தூத்துக்குடி கலெக்டர் ரவிக்குமார் விசாரணை நடத்தினார். மேலும் ஆயுத கப்பல் தூத்துக்குடிக்கு வந்தது குறித்து கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 30 கடல் மைல் தொலைவில் நவீன ஆயுதங்களுடன் நிறுத்தப்பட்டிருந்த சீமென் கார்டு ஓகியா என்ற அமெரிக்கக் கப்பலை இந்திய கடலோர காவல் படையின் நாயகிதேவி கப்பலில் ரோந்து சென்ற வீரர்கள் சுற்றி வளைத்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.
துறைமுகத்தின் 2வது தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள அந்த கப்பலில் பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தினர். இக்கப்பல் அமெரிக்காவில் உள்ள அட்வென் போர்ட் என்ற தனியார் செக்யூரிட்டி நிறுவனத்துக்கு சொந்தமானது என தெரிந்தது.
கப்பலில் 10 மாலுமிகள், 25 வீரர்கள் இருந்ததும், அவர்களிடம் நவீன ரக துப்பாக்கிகள் இருந்ததும் தெரிய வந்தது. அமெரிக்காவின் ஹெர்ன்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அட்வென் போர்ட் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சீமேன் கார்டு ஓகியா, டெக்சாஸ், வெர்ஜீனியா என்ற 3 கப்பல்கள் இருப்பதும் அவை அமெரிக்க அரசிடம் பதிவு பெற்று வில்லியம் ஹக்ஸ் வாட்சன் என்பவரது தலைமையின் கீழ் இயங்கி வருவதும் தெரிந்தது.
கடல் பயணத்தின் போது கொள்ளையர்கள் தாக்குதல், கப்பல் கடத்தல் உள்ளிட்ட ஆபத்துகளில் இருந்து தனியார் கப்பல்களை பாதுகாக்கும் பணியில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் உத்தரவின் பேரில் கடந்த 11ம் தேதி டீசலுக்காக அருகில் உள்ள தூத்துக்குடி துறைமுகம் அருகே 2 ஆயிரம் லிட்டர் டீசலை கப்பலுக்கு பரிமாற்றம் செய்யும் போது இந்திய கடலோர காவல் படையிடம் சிக்கியுள்ளது. அவர்களிடம் இருந்து 10 டீசல் பேரல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாயகிதேவி கப்பலின் கமெண்டர் நரேந்தர் தருவை குளம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த கப்பலை விடுவிப்பது தொடர்பாக இந்திய-அமெரிக்க தூதரக மட்டத்தில், அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஆயுதங்களுடன் அமெரிக்க கப்பல் சிக்கியுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கப்பல் விவகாரம் தொடர்பான, முழுமையான அறிக்கையைத் தாக்கல் செய்யும்படி தமிழக அரசை மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழக தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் விளக்கம் கேட்டுள்ளார். அதன் பேரில் தலைமை செயலாளருககு முதல் கட்ட அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.