மக்கள் விரும்பாத திட்டங்களை தமிழகத்தில் திணிக்கும் மத்திய, மாநில அரசுகள்: ஜி.கே வாசன் குற்றச்சாட்டு
மக்கள் விரும்பாத திட்டங்களை தமிழகத்தில் திணிக்கும் மத்திய மாநில அரசுகள் என்று ஜி.கே வாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை : தொடர்ந்து மக்கள் விரும்பாத திட்டங்களையே தமிழக மக்களிடம் திணிப்பதற்கு மத்திய மாநில அரசுகள் முயற்சி செய்வதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம், நீட் தேர்வு, நியூட்ரினோ ஆய்வு மையம் என தமிழகத்திற்கு மக்கள் விரும்பாத திட்டங்கள் வரிசையாக அணிவகுத்து வருகின்றன. இதனால், தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில், மத்தியில் இருக்கின்ற பா.ஜ.க.வாக இருந்தாலும் சரி, தமிழகத்தில் இருக்கின்ற அ.தி.மு.க.வாக இருந்தாலும் சரி. மாநில மக்களுக்கு நல்லது செய்ய வேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
திணிக்கும் முயற்சி
அதனை விட்டுவிட்டு மக்கள் விரோத போக்கை கடைப்பிடிப்பது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. தமிழகத்தில் விவசாயிகள், பொது மக்கள் விரும்பாத பல திட்டங்களை மத்திய அரசும் தமிழக அரசும், திணிக்க முயற்சிக்கிறது. உச்சநீதிமன்றம் தலையிட்டும் அதை ஏற்க மத்திய அரசு மறுக்கிறது.
அனுமதி கொடுத்தது தவறு
மீத்தேன் எரிவாயு திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், ஓ.என்.ஜி.சி. மின் பைப் லைன் திட்டம், நியூட்ரினோ திட்டம், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை போன்ற பல திட்டங்களை மத்திய அரசு தமிழகத்தில் திணிக்க முயற்சிப்பதும், இதற்காக தமிழக அரசு அனுமதி கொடுப்பதும் கண்டிக்கத்தக்கது.
வாழ்வாதாரம் பாதிப்பு
இந்த திட்டங்களினால் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு வேளாண் தொழில் படிப்படியாக நலிவடைந்து விவசாயமே நடைபெறாமல் போகக்கூடிய நிலை ஏற்படும். நிலத்தடி நீர் மாசுபடும், நீர்மட்டம் குறைந்து போகும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், பலவிதமான நோய்கள் உருவாகும். விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும்.
கருத்துக்கேட்பு கூட்டம்
தமிழக அரசும், மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக விவசாயிகள், பொது மக்கள் போன்றோரிடம் கருத்துக்களை கேட்க வேண்டும். அதன் பிறகு, பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் என்று உறுதியாக தெரிந்தால் மட்டுமே அனுமதி கொடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.