தமிழக சட்டசபைத் தேர்தல்: பிப்.10ல் நஜீம் ஜைதி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
சென்னை: வாக்களித்த பின் ஒப்புகைச் சீட்டு வழங்கும் முறை சட்டசபைத் தேர்தலில் அறிமுகம் செய்யப்படும் என்றும் சோதனை முயற்சியாக 480 மையங்களில் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும் என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி லக்கானி தகவல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தல் தொடர்பாக சென்னையில் வரும் 10ம் தேதி அனைத்துக் கட்சி தலைவர்களுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தப் போவதாகவும் அவர் கூறினார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது அவர், தமிழக சட்டசபைத் தேர்தலை சுமுகமாக நடத்துவது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, சென்னையில் 10ம் தேதி அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மாலை 6 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்கும் என்றார்.
11ம் தேதி காலையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பி.க்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்துகிறார். மாலை 3 மணிக்கு டி.ஜி.பி. மற்றும் தலைமை செயலாளருன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறினார்.
வாக்களித்த பின் ஒப்புகைச் சீட்டு வழங்கும் முறை சட்டசபைத் தேர்தலில் அறிமுகம் செய்யப்படும் என்றும் சோதனை முயற்சியாக 480 மையங்களில் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும் என்றும் லக்கானி தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆண்டு 2580 வாக்குச்சாவடிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதால் கடந்த தேர்தலை விட வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 68,198 ஆக அதிகரித்துள்ளது என்றும் ராஜேஸ் லக்கானி கூறினார்.