கட்சிகளின் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை... ஸ்ரீரங்கம் தேர்தல் அதிகாரிகளுக்கு சக்சேனா உத்தரவு
திருச்சி: கட்சிகள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு வரும் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வேட்பாளர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே ஆளுங்கட்சியினரின் முறைகேடுகள் குறித்து புகார் கொடுத்தால் தேர்தல் அலுவலர் மனோகரன் உடனடியாக நடவடிக்கை எடுப்பதில்லை என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் குறை கூறி வருகின்றன. மேலும் தேர்தல் அதிகாரிகள், அதிமுகவினருக்கு சாதகமாக நடப்பதாகவும் புகார்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா.
அப்போது அவர் கூறியதாவது:-
அரசியல் கட்சிகள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்திற்காக வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்துள்ள கட்சியினர் பிப்ரவரி 11ம் தேதி மாலை 6 மணிக்குள் ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியேற வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இதேபோல், ஸ்ரீரங்கத்தில் இம்மாதத்தில் மட்டும் 2 சதவீதம் மது விற்பனை அதிகரித்துள்ளதாகக் கூறிய சக்சேனா, இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.