பிளஸ் 2 மாணவர்களுக்கு 15ம் தேதி முதல் ஒரிஜினல் சான்றிதழ்கள் - பள்ளிக் கல்வித்துறை
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் அசல் மதிப்பெண் சான்றிதழை 15 ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 5 ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 31 ஆம் தேதி முடிவடைந்தது. தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு மே மாதம் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது. மாணவர்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண் விவரம், தேர்வு முடிவுடன் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழ் இந்த வருடம் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி வழங்கப்பட்டது. இதுவரை மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ் இல்லாமல் இருந்தனர். அவர்களுக்கு 15 ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி, இணை இயக்குனர் உமா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2015 ஆம் வருடம் மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. மே மாதம் 14 ஆம் தேதி தற்காலிக சான்றிதழ் பள்ளிகள் மூலம் வழங்கப்பட்டது. 15 ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளிக்கூடங்கள் மூலம் மாணவ-மாணவிகளுக்கு கொடுக்கப்படும். தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளனர்.