அட்ரஸ் கேட்பது போல பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு.. 2 பேரை கம்பத்தில் கட்டி அடித்த மக்கள்!
கோவை: கோவையில் முகவரி கேட்பது போல பெண்ணிடம் இருந்து நகையை பறித்த இருவரை பொதுமக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து நொறுக்கினர்.
கோவை அருகே உள்ள தடாகம் திவ்யா காலனியில் வசித்து வரும் கட்டிட தொழிலாளி முத்துவேலின்(34) மனைவி ஈஸ்வரி(29). அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். வியாழக்கிழமை காலை முத்துவேல் வேலைக்கு சென்ற பிறகு 8 மணி அளவில் வீட்டுக்கு வெளியே நின்று தனது மகள் அபிநயாவுக்கு ஈஸ்வரி சாப்பாடு கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவர் ஈஸ்வரியிடம் ஒரு கார்டை காட்டி முகவரி கேட்டுள்ளனர். அதற்கு அவர் தனக்கு இந்த முகவரி தெரியாது என்று கூறிக் கொண்டிருக்கையிலேயே ஒருவர் பைக்கில் ஏறி அதை ஸ்டார்ட் செய்தார். அந்த நேரம் பார்த்து மற்றொருவர் ஈஸ்வரியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓட முயன்றார்.
ஈஸ்வரியோ திருடனின் சட்டை காலரை பிடித்து திருடன் திருடன் என்று சப்தம் போட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை பார்த்த அந்த 2 பேரும் ஓட முயன்றனர். ஆனால் பொதுமக்கள் அவர்களை பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து நொறுக்கினர்.
இது குறித்து தகவல் அறிந்த துடியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த 2 பேரையும் பொதுமக்களிடம் இருந்து மீட்டு கைது செய்து அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த கார்த்தி(24) மற்றும் தூத்துக்குடி மாவட்டம் புலியங்குளத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி(29) என்பதும் தெரிய வந்தது. போலீசார் அவர்கள் ஓட்டி வந்த பைக் மற்றும் ஈஸ்வரியிடம் இருந்து பறித்த 5 பவுன் நகையை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.