சென்னை மயிலாப்பூரில் ஒரே நாளில் 3 பெண்களிடம் நகை பறித்த கொள்ளையர்கள்- சிசிடிவியில் பதிவான காட்சி
சென்னை: மயிலாப்பூரில் அடுத்தடுத்து 3 இடங்களில் பெண்களிடம் பைக் ஆசாமிகள் செயின் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணீஸ்வரர் கோவில் தெரிவில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் அமலா ராஜேஸ்வரி இவர், நேற்று காலை அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த மர்ம ஆசாமி ஒருவர் அமலாவின் கழுத்தில் கிடந்த 3 சவரன் நகையை பறித்து சென்றனர்.
மோட்டார் பைக்கில் சென்ற நபர் அமலாவின் கழுத்தில் இருந்த நகையை பறித்து செல்லும் காட்சிகள் அங்குள்ள ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவில் பதிவாகி உள்ளது. அதே பகுதியில் காய்கறி கடை நடத்தி அவர் வழக்கம் போல் வீட்டில் இருந்து கடைக்குச் செல்லும் போது இந்த துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிசிடிவியில் பதிவாகி இருந்த அதே நபர் மல்லிகா என்பவரிடமும், அஞ்சலை என்பரிடமும் நகையை பறித்து பைக்கில் பறந்துள்ளார்.
கோலம் போட்ட பெண்
மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் 9வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா. இவர், அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை காலை பேராசியர் சஞ்சீவி, அடுக்குமாடி குடியிருப்பு வாசலில் மல்லிகா கோலம் போட்டு கொண்டிருந்த போது, பைக்கில் வந்த ஆசாமி அவரது கழுத்தில் கிடந்த ஒரு சவரன் நகையை பறித்து சென்றனர்.
அஞ்சலை
மயிலாப்பூர் குயில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அஞ்சலை, 42. இவர், நேற்று காலை அதே பகுதி சாலையில் நடைபயிற்சி சென்றபோது, ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த ஆசாமி திடீரென அஞ்சலை கழுத்தில் கிடந்த 5 சவரன் நகையை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை பறிப்பு சம்பவங்கள்
சென்னையில் அடுத்தடுத்து நடந்து வரும் நகை பறிப்பு சம்பவங்களை தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாப்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதியில் மட்டும் ஒரே மாதத்தில் 10க்கும் மேற்பட்ட நகை பறிப்பு சம்பங்கள் நடந்திருப்பது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
நகை பறிப்பு திருடர்கள்
ஜூலை மாதத்தில் மயிலாப்பூரில் 5 நகை பறிப்புகளும் , ராயப்பேட்டை, ஐஸ்அவுஸ் பகுதியில் தலா 2 சம்பவங்களும், பட்டினப்பாக்கத்தில் மூன்றும் , அபிராமபுரத்தில் 2 நகைப்பறிப்பும் அரங்கேறியுள்ளன.
போலீஸ் பாதுகாப்பு
பைக் கொள்ளையனை விரைந்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில் விசாரணை நடத்தி வருவதாகவும் , குற்றவாளியை விரைவில் பிடிபடுவார் என்றும் காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர். நகை பறிக்கப்பட்ட காரணீஸ்வரர் கோவில் வீதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.