வெள்ள நிவாரண டோக்கன் தருவதாக வீடு புகுந்து சங்கிலி பறித்த ‘பலே’ திருடன்!
சென்னை: சென்னையில் வெள்ள நிவாரணம் பெற டோக்கன் தருவதாகக் கூறி ஏமாற்றி, வீடு புகுந்து பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையை அடுத்த தாம்பரம், முடிச்சூர் பகுதி வெள்ளத்தால் கடும் பாதிப்புகளைச் சந்தித்தது. தற்போது அப்பகுதியில் அரசின் வெள்ள நிவாரண நிதியைப் பெற கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மர்மநபர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முடிச்சூர் ஏ.என்.காலனி 2வது பிரதான சாலையைச் சேர்ந்த சேதுராமன் என்பவரது மனைவி பத்மாவதி(59). நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த பத்மாவதியிடம், வெள்ள நிவாரணத்துக்கு டோக்கன் அளிக்க வந்துள்ளதாக மர்மநபர் ஒருவர் கூறியுள்ளார்.
இதனை உண்மையென நம்பிய பத்மாவதி அவரை வீட்டிற்குள் அனுமதித்துள்ளார். வீட்டிற்குள் நுழைந்த அந்த நபர் திடீரென பத்மாவதியின் வாயைப் பொத்தி, அவர் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துள்ளார். பின்னர், பத்மாவதியை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு, அவர் தப்பிச் சென்றார்.
பத்மாவதியின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தார், அவரைக் காப்பாற்றினர்.
இந்த சம்பவம் தொடர்பாக பீர்க்கன்கரணை போலீசில் பத்மாவதி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ள நிவாரண நிதி பெறுவது தொடர்பாக மக்களிடம் தொடர்ந்து குழப்பம் காணப்படுகிறது. இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டு, திருடர்கள் இவ்வாறு திருட்டுகளில் ஈடுபடுகின்றனர். எனவே, மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.