சென்னை அரும்பாக்கத்தில் செயின் பறித்த திருடன் கைது... வாகன சோதனையில் போலீசிடம் பிடிபட்டான்!
சென்னை அரும்பாக்கத்தில் செயின் பறித்த திருடன் கோயம்பேடு போலீசாரால் கைது செய்யப்பட்டான்.
சென்னை : சென்னை அரும்பாக்கத்தில் செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்புடைய திருடனை இன்று கோயம்பேடு அருகே வாகனசோதனையின் போது போலீஸார் கைது செய்தனர்.
கடந்த வாரம் சென்னையில் பல்வேறு செயின் பறிப்பு சம்பவங்கள் குறித்து ஒரே சமயத்தில் புகார் எழுந்தன. அதில் சென்னை அரும்பாக்கத்தில் நடந்து சென்ற பெண் ஒருவரின் செயினை பறிக்கும் போது, அவர் கீழே விழுந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
அதுகுறித்து போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இன்று சென்னை கோயம்பேடு அருகே போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக வந்த வண்டியை நிறுத்தினர்.
அப்போது நிற்காமல் சென்றதால், அந்த வண்டியில் வந்தவனை போலீஸார் துரத்திப்பிடித்தனர். இதில் அந்த நபரின் கை முறிந்தது. விசாரணையில், அவன் திருவல்லிக்கேணி அயோத்தியா நகரைச் சேர்ந்த அருண்குமார் என்பதும், பிரபல செயின் பறிப்பு திருடன் என்பதும் தெரியவந்தது.
மேலும், அவனிடம் இருந்து ஆறு சவரன் நகை மீட்கப்பட்டுள்ளது. இவன் கடந்த வாரம் அரும்பாக்கத்தில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவன் என்பதும் தெரியவந்துள்ளது. அருண்குமார் மீது இதுவரை 11 செயின் பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.