கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, நெல்லை மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் #Rain
5 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
வீடுகள், விளைநிலங்கள் மூழ்கின
இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கன்னியாகுமரி, வால்பாறை, நீலகிரி, ஈரோடு என பல்வேறு மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தால் சூழ்ந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக மீட்டு பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் ஏராளமான விவசாயிகளின் விளைநிலங்களும் இந்த வெள்ளநீரில் மூழ்கியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த கவலைக்கு உள்ளாகி உள்ளனர்.
5 மாவட்டங்களிலும் நீடிக்கும்
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு அதிகமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த மாவட்டங்களில் மழை அதிக அளவில் பெய்து வந்தாலும், அடுத்து 24 மணி நேரத்துக்கு இந்த மழையின் அளவு நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு சில இடங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் லேசான மழை
இதைதவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவில் லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
வால்பாறையில் அதிகம்
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக வால்பாறையில்தான் அதிக மழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது. வால்பாறையில் 31 செ.மீ. மழையும், நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 17 செ.மீ. மழையும், தேனி மாவட்டம் பெரியாறு, நீலகிரி நடுவட்டம் ஆகிய இடங்களில் 12 செ.மீ. மழையும் பெய்துள்ளது. வால்பாறையில் கடந்த 2007-ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் இவ்வளவு பெரிய மழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது.