வெப்ப சலனத்தால் தமிழகம்-புதுச்சேரிக்கு லேசான மழை : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை : வெப்பச்சலனம் காரணமாக உள் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர். விடுமுறையை அனுபவிக்க கூட பிள்ளைகள் வெளியில் வந்து விளையாட முடிவதில்லை. சாலையில் நடந்துசெல்வோர் பெரும்பாலானோர் மயக்க நிலைக்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில் 9 இடங்களில் வெயில் கிட்டதட்ட 100 டிகிரி செல்சியசை எட்டியுள்ளது. இந்த ஆண்டு வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை ஆய்வு மையம் வேறு பகீர் செய்தியை அறிவித்திருந்தது. இன்னும் சில நாட்களில் வெயிலின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை நினைத்து கூடபார்க்கவே முடியவில்லை.
எனினும் தேனி மாவட்டத்தில் கம்பம், பெரியகுளம் கூடலூர் போன்ற பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. அதேபோல நெல்லையில் நேற்று வெயில் 106 டிகிரி செல்சியசாக சுட்டெரித்தாலும், பரவலாக மழை பெய்தது.
இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக உள் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மேலும் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.