தமிழகத்தில் சில இடங்களில் மழை... சென்னையில் வெறும் மேகமூட்டம் மட்டும்: சொல்கிறது வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் , வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ; சென்னையில் மேகமூட்டம் மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், தற்போது தமிழகத்தை சுற்றியுள்ள கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியோ, காற்றழுத்த தாழ்வு பகுதியோ ஏற்பட வாய்ப்பு இல்லாததால் நிலப்பகுதியை நோக்கி மழை மேகங்கள் வருவது குறைந்துள்ளது. அதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை வாய்ப்புகள் குறைந்துள்ளன.
சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மேலும், தூத்துக்குடியில் ஒட்டப்பிடாரம், நெல்லை பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் 3 செ.மீ., சாத்தான்குளத்தில் 2 செமீ, மழை பதிவாகி உள்ளது.
தஞ்சை மாவட்டம் மதுக்கூர், கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு, நெல்லை மாவட்டம் பாபநாசம், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, நாகை மாவட்டம் ஆணைக்காரன்சத்திரம், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.