வங்கக்கடலில் காற்றழுத்தம்: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!- வானிலை எச்சரிக்கை
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வட கிழக்கு பருவமழை சீசன் முடிவடைந்த நிலையிலும், புதியதாக காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய பாலச்சந்திரன், வங்கக் கடலில், அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால், சென்னை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட கிழக்குக் கடலோர பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை படிப்படியாக நகர்ந்து, மன்னார் வளைகுடா முதல் வட தமிழகம் வரை பரவி வருவதாகவும் குறிப்பிட்டுள்ள பாலச்சந்திரன், கனமழை பெய்வது உறுதி என்றும் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம், மேல்மருவத்தூர் மற்றும் சுற்றுவட்டராத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. சில நாட்காளாக வெயில் வாட்டி எடுத்த நிலையில் தற்போது பெய்துள்ள மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதன் காரணமாக, தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் குளிர் காற்று வீசியது. சைதாப்பேட்டை, வடபழனி, தேனாம்பேட்டை, தி.நகர் உள்ளளிட்ட இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.
திருவள்ளுவர் மாவட்டத்திலும் ஆவடி, அம்பத்தூர், போரூர், பூவிருந்தவல்லி, செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்தது.
இரவில் சாலை மழை பெய்தது. திருச்சி, கும்பகோணம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் வாலிகண்டபுரம், பாடாலூர், குன்னம், செட்டிக்குளம், வேப்பந்தட்டை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.
நாகை மாவட்டத்தில், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி, செம்பனார்கோயில் உள்ளிட்ட பகுதிகளிலும், பரவலாக மழை பெய்து வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில், மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, குடவாசல், வலங்கைமான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நெல்லையில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் நிலவி வந்த நிலையில், நேற்று திடீரென கனமழை பெய்தது. சுமார் 2 மணிநேரம் நீடித்த இம்மழை காரணமாக, வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். பாளையங்கோட்டை, நெல்லை டவுண், தச்சநல்லூர் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்தது.